Saturday 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2


 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள். 

சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து சேர்ந்தோம். Hotel நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகான அமைப்புடன் இருந்தது. ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துவிட்டு  அடுத்தக் கட்ட உள்ளூர் பயணத்திற்கு தயாரானோம். Hotel - அறையினில் இருந்து உதகை ரம்மியமாக காட்சி அளித்தது. வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது.


Hotel அறையிலிருந்து வெளியில் வந்தவுடன் புதிய சீதோஷன நிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மழை மற்றும் குளிருக்கு இதமான ஆடைகளையே அணிந்திருந்தோம் இருந்தாலும் நவம்பர் மாதக் குளிரைத் தாங்கும் வகையில் குளிருக்கேற்ற அணிகலன்களை வாங்கி அணிந்துகொண்டோம்.

இருசக்கர வாகனத்தை வாடகை அமர்த்திக் கொண்டு உள்ளூரில் உள்ள சில இடங்களை கண்டு களிக்கலாம் என்று திட்டம். அதேபோல் தலா  ஒரு Thunderbird, Pulser மற்றும் Dio வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை வாடகை வாகனங்களின் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவு தனி. நமது ஓட்டுனர் உரிமங்களை சரி செய்த பிறகே வாகனங்களை அளிக்கின்றனர். (ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து கொள்கின்றனர் அத்தாட்சிக்காக)

அனைவரும் அவரவர் வண்டிகளில் உதகை நகர ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தோம், ஏரியில் படகுச் சவாரி செய்வதற்காக. மழை மீண்டும் குறுக்கிடவே ஏற்கனவே குளிரில் இருந்த நாங்கள் ஓரமாக நின்று மழை முழுவதுமாக நிற்கும் வரை காத்திருந்தோம். பனி மூடிய அந்த மாலைப் பொழுது மிகவும் இதமாக இருந்தது. மழை நின்ற பிறகு முதலில் மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் ஒரு தனியாரினுடையது. ரூ. 20 நுழைவுக் கட்டணம், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பலவேறு வகைகளில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மெழுகு அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் உதகை ஏரி நோக்கி பயணித்தோம். மழை தூறிக் கொண்டிருக்கவே படகுச் சவாரி செய்ய முடியாது என்று ஏரியின் அழகை கண்டு ரசித்தோம். உதகை ஏரியில் மோட்டார் விசைப் படகு, துடுப்புப் படகு, கால் மிதிப் படகு என்று பல்வேறு வகைகளில் படகுச் சவாரி செய்யலாம். எரிக்கரையில் ஏராளமான கடைகள் மற்றும் அதற்க்கேற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள். அந்த இதமானக் குளிருக்கு இதமாக சூடான ஊட்டி மிளகாய் பஜ்ஜி வாங்கி சுவைத்தோம்.


மீண்டும் அவரவர் வண்டிகளில் உதகை நகரச் சாலைகளில் பயணித்து வண்டியை ஒப்படைத்துவிட்டு எங்களது அறையை நோக்கி நடக்கத் துவங்கினோம. மேலும், வீட்டுக்கு தேவையான தேயிலை மற்றும் யூக்கலிப்டஸ் தைலங்களையும் உதகை கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொண்டு அறையை சென்றடைந்தோம். இரவு உணவை முடித்து உறங்கலானோம் அடுத்தநாள் திட்டங்களை யோசித்துக்கொண்டே.

முதல் நாள் ஹோட்டல் மேலாளரிடமும், வெளியில் சில உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்களிடமும்  விசாரித்து உதகை உள்ளூர் இடங்கள், பைகாரா மற்றும் முதுமலை வனவிலங்கு சரணாலயம் செல்ல வண்டிக்கு முன் பதிவு செய்திருந்தோம். காலை சரியாக 9 மணிக்கு Hotel அறையை காலி செய்துவிட்டு முதல்நாள் ஏற்பாடு செய்திருந்து வண்டியில் பயணம் செய்ய தயாரானோம்.

மிக இதமான மழையுடன்தான் எங்களுடைய பயணத்தை துவக்கினோம். முதலில் சாக்லேட் அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். இதுவும் ஒரு தனியார் வசமான அருங்காட்சியகம் தான் (சாக்லேட் கடை). நுழைவுக் கட்டணம் ரூ. 20. நல்ல கலைப் பொருட்கள் சாக்லேட் மற்றும் வெள்ளை நிறத்திலான சாக்லேட் வகைகளில் செய்து வைத்திருந்தனர். முடிவில் சாக்லேட் துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நமக்குத் தேவையான சாக்லேட் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஒரு Marketing technique என்று தோன்றியது.

பைகாரா செல்லும் வழியில், Pine Forest எனப்படும் ஊசியிலைக் காடுகளை பார்த்து ரசித்தோம்.பெரிய பெரிய மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துள்ளது போல இருந்தது. புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். இந்த மரங்கள் வரிசையின் முடிவில் காமராஜர் சாகர் அணை உள்ளதாக வண்டி ஓட்டுனர் கூறினார். மேலும், பல திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 9th Mile என்ற இடத்தில் சில மணித்துளிகள் செலவு செய்துவிட்டு பைகாரா நோக்கிப் புறப்பட்டோம்.


பைகாரா என்னும் இடத்தில் உருவாகும் பைகாரா ஆறு, அருவியாக விழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக  நீர் மின்சாரம் இங்கு எடுக்கப்படுகிறது. உதகை-கூடலூர் சாலையில் பைகாரா ஆற்றின் குறுக்கே பைகாரா அணை ஒன்றும்  கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சாலையிலிருந்தே பைகாரா அணை, மட்டும் அருவியைப்  பார்க்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பைகாரா ஆற்றின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக படகுச் சவாரி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அங்கேயும் படகுச் சவாரி செய்ய முடியாமல் ஆற்றின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம். பைகாரா ஆறு இந்தியாவின் வரைபடம் போல தோற்றமளிக்கின்றது.


பைகாராவில் இருந்து  கூடலூர் வழியாக முதுமலை சென்றடைந்தோம். முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் எல்லையிலிருந்து தொடங்கி கர்நாடக மற்றும் கேரளா எல்லை வரை விரிகின்றது. 1940-ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகம் இதுவேயாகும். முதுமலை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. மேலும் இந்தக் காட்டுப்பகுதியில் யானை, மான்கள், சிறுத்தைகள், கரடிகள் காட்டுப்பன்றிகள், முள்ளம்  பல வகையான உயிரினங்கள் இருப்பதாக கூறி இருந்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக Tempo Traveller வண்டியில் காட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணி நேரப் பயணத்திற்கு ரூ. 150 வசூலிக்கின்றனர். மேலும், முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு காட்சியகமும் அரசு அமைத்துள்ளது.



மேலும், திறந்த வெளி ஜீப்பில் காட்டினுள்ளே சென்று வன உயிரினங்களை பார்க்க முடியும். அதற்க்கான வசதியுடன் பல ஜீப்புகள் காத்திருக்கின்றன. 1.30 நிமிடப் பயணம். அரசு வண்டியில் சென்றால் செல்ல முடியாத சத்தியமங்கலம் வனப்பகுதியையும், மாயோர் என்னும் சிற்றுரையும் அங்கு ஓடும் அழகான நதியையும் காண முடிகின்றது. 10 பேர் அமரக் கூடிய ஜீப்பிற்கு ரூ. 800 கேட்கின்றனர். காட்டுவழிப் பயணம் என்பதால் அதன் சுவாரஸ்யத்தை கண்டு களிக்க இந்த தொகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாயோர் நதி யில் ஒரு சிறிய தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தை மிக அருகில் இருந்து கண்டு களிக்க முடிகின்றது. இந்த நதி பவானி ஆற்றுடன் கலப்பதாக கூறினார்கள். 1.30 மணி நேர ஜீப் பயணத்தில் நாங்கள் யானை, மான்கள், மயில்கள் மற்றும் லங்கூர் வகை குரங்குகளை  மட்டுமே பார்க்க முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வாசகம் பலித்திருந்தது. அந்த வாசகம், "அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே மிருகங்களை காண முடியும்", "Animal sight-seeing is the matter of luck".



முதுமலையில் தாவரங்கள், காடு மற்றும் விலங்குகளை கண்டு ரசித்த பிறகு மசினகுடி, தலைகுந்தா  வழியாக  26 கொண்டை ஊசி திருப்பங்கள் உடைய சாலையில் மீண்டும் உதகை வந்தடைந்தோம். ரம்மியமான சாலை அப்போதுதான் போட்டு முடிக்கப்பட்டிருந்தது. உதகையில் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 2 நாட்களுக்கான பயணத்தை மீண்டும் நினைத்துக்கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.  

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena