Saturday 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)

இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம். 

திருப்பதி RTC பேருந்து நிலையத்தில் திருமலைக்கு செல்லும் அரசுப் பேருந்திற்கு மாற்றலாகி திருமலைக்கு புறப்பட்டோம். ஒவ்வொரு முறை திருமலைக்கு பயணப்படும் போதும் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றத்தை காண முடியும். இம்முறை திருமலைக்கு சென்ற அரசுப் பேருந்தில்  "ஓம் நமோ வேங்கடேசாய.." மந்திரம் ஒலித்துக்குக் கொண்டே இருந்தது. இந்த மந்திர உச்சரிப்பு நம்மை திருமலைக்கு செல்லும் வழியெங்கும் மனதை  ஆன்மீகத்தில் ஒருங்கிணைப்படுத்தியது. மேலும், மலைச் சாலை தொடங்கியதுமே ஒவ்வொருவரும் சோதனைக்குட்படுத்தியபிறகே பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை ராம் பக்கீஜா பேருந்து  நிலையத்தில் இறக்கி விடப்பட்டோம். தலை மொட்டை அடித்துக் கொள்ள சென்றவர்கள் திரும்பும் வரை அங்கேயே காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு கை பேசி, செருப்புகள் மற்றும் நம்மிடம் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களை அங்கு ஒரு கடையில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இனி தரிசனம் முடிந்த பிறகுதான் இதனை திரும்ப எடுக்க முடியும்.

திருமலையில் எதாவது ஒரு கட்டிட, சாலை மற்றும் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கோவிலின் முன்புறம் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு முன்  திருமலை வந்த பொது கோவிலின் முன்னே சூடம் ஏற்றும் இடத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை இருபுறமும் கடைகள் இருக்கும். இம்முறை ஆஞ்சநேயர் கோவில் வரை தரை தான். மிகவும் விஸ்தாரமாக காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு இடது புறம் உள்ள வைகுண்டம் Q காம்ப்ளெக்ஸ் க்கு சென்று சுற்றுலா அதிகாரி Rs. 300/- அனுமதி சீட்டு வாங்கி வரும் வரை காத்திருந்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக மணி 12 அளவில் Q காம்ப்ளெக்ஸ் ன் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். வழக்கம் போல அறைகளில் மக்கள் கூட்டம். நாங்கள் 25 ஆம் எண் அறையிலிருந்து வெளியேறி Q காம்ப்ளெக்ஸ் முழுவதும் நடந்து (ஊர்ந்து!) சென்று மீண்டும் கோவிலின் இடது புற வழியாக திரும்பி முன்புறமான மஹா  துவாரம் என்றழைக்கப்படும் பிரதான வாயிலில் நுழைந்தோம்.

கோவிலினுள் அனைத்து மண்டபங்களும் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கொடிமரம் தாண்டி மீண்டும் ஒரு சிறு கோபுரம் வழியாக மூலஸ்தானம் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அதுவரை பொறுமையாக வந்த மக்கள் அதற்குப் பிறகு தள்ளு முள்ளுதான். கிட்ட தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு ஏழுமலையானை சுமார் 1 நிமிடம் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலின் உள்ளே இருந்து வெளியேறினோம்.

சுற்றுலா அதிகாரி கூறியது போல கோவிலின் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு அவரவர் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் ராம் பக்கீஜா பேருந்து நிலையத்திற்கு திரும்பி உடமைகளை பெற்றுக் கொண்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.

திருப்பதி வந்தவுடன் மதிய உணவு எடுத்துக் கொள்ள திட்டம். மணி 4.45. எங்களுடைய அடுத்தப் பயணத்திட்டத்தில் திருச்சானூர் அலமேலுமங்கை கோவில். இந்த கோவிலில் மாலை 5.30 மணியிலிருந்து 07.00 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது. இந்த காரணத்தை கொண்டு மதிய உணவை புறந்தள்ளி விட்டு Rs. 100/- பெறுமான அனுமதி சீட்டு வாங்கி 05.30 மணிக்கு முன்னதாகவே தரிசனம் முடித்தாயிற்று. திருச்சானூர் கோவிலில் Rs. 100/- அனுமதி சீட்டிற்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சென்னை திரும்பும் வழியில் திருத்தணியில் எங்களுடைய மதிய(மாலை) உணவை அருந்தினோம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் ஹிந்தி  (தெரிந்த வரை!) மொழிகளில் பலரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 

திருமலை-திருப்பதி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணி, திருவள்ளூர், போரூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


Read More

Saturday 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2


 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள். 

சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து சேர்ந்தோம். Hotel நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகான அமைப்புடன் இருந்தது. ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துவிட்டு  அடுத்தக் கட்ட உள்ளூர் பயணத்திற்கு தயாரானோம். Hotel - அறையினில் இருந்து உதகை ரம்மியமாக காட்சி அளித்தது. வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது.


Hotel அறையிலிருந்து வெளியில் வந்தவுடன் புதிய சீதோஷன நிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மழை மற்றும் குளிருக்கு இதமான ஆடைகளையே அணிந்திருந்தோம் இருந்தாலும் நவம்பர் மாதக் குளிரைத் தாங்கும் வகையில் குளிருக்கேற்ற அணிகலன்களை வாங்கி அணிந்துகொண்டோம்.

இருசக்கர வாகனத்தை வாடகை அமர்த்திக் கொண்டு உள்ளூரில் உள்ள சில இடங்களை கண்டு களிக்கலாம் என்று திட்டம். அதேபோல் தலா  ஒரு Thunderbird, Pulser மற்றும் Dio வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை வாடகை வாகனங்களின் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவு தனி. நமது ஓட்டுனர் உரிமங்களை சரி செய்த பிறகே வாகனங்களை அளிக்கின்றனர். (ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து கொள்கின்றனர் அத்தாட்சிக்காக)

அனைவரும் அவரவர் வண்டிகளில் உதகை நகர ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தோம், ஏரியில் படகுச் சவாரி செய்வதற்காக. மழை மீண்டும் குறுக்கிடவே ஏற்கனவே குளிரில் இருந்த நாங்கள் ஓரமாக நின்று மழை முழுவதுமாக நிற்கும் வரை காத்திருந்தோம். பனி மூடிய அந்த மாலைப் பொழுது மிகவும் இதமாக இருந்தது. மழை நின்ற பிறகு முதலில் மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் ஒரு தனியாரினுடையது. ரூ. 20 நுழைவுக் கட்டணம், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பலவேறு வகைகளில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மெழுகு அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் உதகை ஏரி நோக்கி பயணித்தோம். மழை தூறிக் கொண்டிருக்கவே படகுச் சவாரி செய்ய முடியாது என்று ஏரியின் அழகை கண்டு ரசித்தோம். உதகை ஏரியில் மோட்டார் விசைப் படகு, துடுப்புப் படகு, கால் மிதிப் படகு என்று பல்வேறு வகைகளில் படகுச் சவாரி செய்யலாம். எரிக்கரையில் ஏராளமான கடைகள் மற்றும் அதற்க்கேற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள். அந்த இதமானக் குளிருக்கு இதமாக சூடான ஊட்டி மிளகாய் பஜ்ஜி வாங்கி சுவைத்தோம்.


மீண்டும் அவரவர் வண்டிகளில் உதகை நகரச் சாலைகளில் பயணித்து வண்டியை ஒப்படைத்துவிட்டு எங்களது அறையை நோக்கி நடக்கத் துவங்கினோம. மேலும், வீட்டுக்கு தேவையான தேயிலை மற்றும் யூக்கலிப்டஸ் தைலங்களையும் உதகை கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொண்டு அறையை சென்றடைந்தோம். இரவு உணவை முடித்து உறங்கலானோம் அடுத்தநாள் திட்டங்களை யோசித்துக்கொண்டே.

முதல் நாள் ஹோட்டல் மேலாளரிடமும், வெளியில் சில உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்களிடமும்  விசாரித்து உதகை உள்ளூர் இடங்கள், பைகாரா மற்றும் முதுமலை வனவிலங்கு சரணாலயம் செல்ல வண்டிக்கு முன் பதிவு செய்திருந்தோம். காலை சரியாக 9 மணிக்கு Hotel அறையை காலி செய்துவிட்டு முதல்நாள் ஏற்பாடு செய்திருந்து வண்டியில் பயணம் செய்ய தயாரானோம்.

மிக இதமான மழையுடன்தான் எங்களுடைய பயணத்தை துவக்கினோம். முதலில் சாக்லேட் அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். இதுவும் ஒரு தனியார் வசமான அருங்காட்சியகம் தான் (சாக்லேட் கடை). நுழைவுக் கட்டணம் ரூ. 20. நல்ல கலைப் பொருட்கள் சாக்லேட் மற்றும் வெள்ளை நிறத்திலான சாக்லேட் வகைகளில் செய்து வைத்திருந்தனர். முடிவில் சாக்லேட் துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நமக்குத் தேவையான சாக்லேட் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஒரு Marketing technique என்று தோன்றியது.

பைகாரா செல்லும் வழியில், Pine Forest எனப்படும் ஊசியிலைக் காடுகளை பார்த்து ரசித்தோம்.பெரிய பெரிய மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துள்ளது போல இருந்தது. புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். இந்த மரங்கள் வரிசையின் முடிவில் காமராஜர் சாகர் அணை உள்ளதாக வண்டி ஓட்டுனர் கூறினார். மேலும், பல திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 9th Mile என்ற இடத்தில் சில மணித்துளிகள் செலவு செய்துவிட்டு பைகாரா நோக்கிப் புறப்பட்டோம்.


பைகாரா என்னும் இடத்தில் உருவாகும் பைகாரா ஆறு, அருவியாக விழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக  நீர் மின்சாரம் இங்கு எடுக்கப்படுகிறது. உதகை-கூடலூர் சாலையில் பைகாரா ஆற்றின் குறுக்கே பைகாரா அணை ஒன்றும்  கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சாலையிலிருந்தே பைகாரா அணை, மட்டும் அருவியைப்  பார்க்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பைகாரா ஆற்றின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக படகுச் சவாரி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அங்கேயும் படகுச் சவாரி செய்ய முடியாமல் ஆற்றின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம். பைகாரா ஆறு இந்தியாவின் வரைபடம் போல தோற்றமளிக்கின்றது.


பைகாராவில் இருந்து  கூடலூர் வழியாக முதுமலை சென்றடைந்தோம். முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் எல்லையிலிருந்து தொடங்கி கர்நாடக மற்றும் கேரளா எல்லை வரை விரிகின்றது. 1940-ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகம் இதுவேயாகும். முதுமலை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. மேலும் இந்தக் காட்டுப்பகுதியில் யானை, மான்கள், சிறுத்தைகள், கரடிகள் காட்டுப்பன்றிகள், முள்ளம்  பல வகையான உயிரினங்கள் இருப்பதாக கூறி இருந்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக Tempo Traveller வண்டியில் காட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணி நேரப் பயணத்திற்கு ரூ. 150 வசூலிக்கின்றனர். மேலும், முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு காட்சியகமும் அரசு அமைத்துள்ளது.



மேலும், திறந்த வெளி ஜீப்பில் காட்டினுள்ளே சென்று வன உயிரினங்களை பார்க்க முடியும். அதற்க்கான வசதியுடன் பல ஜீப்புகள் காத்திருக்கின்றன. 1.30 நிமிடப் பயணம். அரசு வண்டியில் சென்றால் செல்ல முடியாத சத்தியமங்கலம் வனப்பகுதியையும், மாயோர் என்னும் சிற்றுரையும் அங்கு ஓடும் அழகான நதியையும் காண முடிகின்றது. 10 பேர் அமரக் கூடிய ஜீப்பிற்கு ரூ. 800 கேட்கின்றனர். காட்டுவழிப் பயணம் என்பதால் அதன் சுவாரஸ்யத்தை கண்டு களிக்க இந்த தொகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாயோர் நதி யில் ஒரு சிறிய தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தை மிக அருகில் இருந்து கண்டு களிக்க முடிகின்றது. இந்த நதி பவானி ஆற்றுடன் கலப்பதாக கூறினார்கள். 1.30 மணி நேர ஜீப் பயணத்தில் நாங்கள் யானை, மான்கள், மயில்கள் மற்றும் லங்கூர் வகை குரங்குகளை  மட்டுமே பார்க்க முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வாசகம் பலித்திருந்தது. அந்த வாசகம், "அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே மிருகங்களை காண முடியும்", "Animal sight-seeing is the matter of luck".



முதுமலையில் தாவரங்கள், காடு மற்றும் விலங்குகளை கண்டு ரசித்த பிறகு மசினகுடி, தலைகுந்தா  வழியாக  26 கொண்டை ஊசி திருப்பங்கள் உடைய சாலையில் மீண்டும் உதகை வந்தடைந்தோம். ரம்மியமான சாலை அப்போதுதான் போட்டு முடிக்கப்பட்டிருந்தது. உதகையில் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 2 நாட்களுக்கான பயணத்தை மீண்டும் நினைத்துக்கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.  
Read More

Thursday 5 December 2013

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள்

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள் என்னும் தலைப்பில் அதிஷா அவர்கள் அவரின் வலைப் பதிவினில் பகிர்ந்திருந்தார். அந்தப் பட்டியல் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. (நன்றி: அதிஷா, பா. ரா)

நூறு நூல்களின் பெயர் மட்டுமின்றி அதன் சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் தரவரிசைப் படி அமைக்கப்படவில்லை. சென்னை புத்தக காட்சி 2014 சமயத்தில் இந்த நூல்களின் பட்டியல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்,

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.
Read More

Wednesday 4 December 2013

சென்னை புத்தக கண்காட்சி - 2014

சென்னை புத்தக கண்காட்சி - 2014

இடம்: 

YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035

நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014

இம்முறை பல போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக பபாசி இணையதளம் அறிவிக்கின்றது. போட்டிகளின் விபரங்கள்,

1. சிறுகதை போட்டி 
2. குறும்படப்  போட்டி
3. ஓவியப் போட்டி
4. பேச்சுப் போட்டி 

மேலும் விபரங்களுக்கு http://www.bapasi.com/
Read More

கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US  Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.  

துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான். அனைவருக்கும் அவரவர் விருப்ப செய்தித் தாள், காபி (அ) டீ. காலை நேர ரயில் என்பதால் காலை சிற்றுண்டி, மதிய உணவு அனைத்தும் ரயிலினுள்ளேயே. ரயில் ஒன்றும் அத்தனை வேகமில்லை. இடையில் தொழில்நுட்ப காரணங்களுகாக ஈரோடு சந்திப்பில் நிறுத்தப் படுகிறது. சரியான நேரத்தில் கோவை வந்தடைந்தோம்.

பயணத்தின் போதே, கோவையில் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியலிட்டு அதற்கான வண்டியையும் ஏற்பாடு செய்தாயிற்று. ஈஷா யோகா மையம் மற்றும் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு திருமண நிகழ்வுக்கு செல்வதாக திட்டம். 

கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி  பயணமானோம்.கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை வெளியிலிருந்தே தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

ஈஷா தியான மையம்:

ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும்   உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு.

தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு  கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது. மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும். இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரிசிக்க முடியும்.

இந்த தீர்தக்குண்ட அமைப்பின் தரிசனம் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தியது மட்டுமல்லாது ஒரு ஆன்மீக அனுபவத்தை அளித்தது. தியான லிங்க மண்டபத்தினுள் ஒரு நபர் நுழையத் தேவையான ஆன்மீக மனதை இந்த தரிசனம் கொடுக்கின்றது. இந்த தீர்த்தக்குண்டமானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தக்குண்டத்தில் தரிசனம் முடிந்தபின் தியான மையத்தினுள் செல்லும் முன்பாக லிங்க பைரவி ஆலய தரிசனம்.  லிங்க பைரவி ஆலயத்தின் முன்னே முப்பெரும் தேவர்களின் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன தத்ரூபமாக.

இவையனைத்தையும் தரிசித்துவிட்டு ஈஷா தியான லிங்க மண்டபத்தினிற்குள் அனுமதிக்கப்படுகின்றோம். அரை வட்ட வடிவில் ஒரு DOM  அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட தியான லிங்கத்தை சுற்றி பலரும் தியானம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். எந்தவிதமான சப்தம் எழுப்பும் பொருட்களுக்கும் தியான லிங்க மையத்திற்குள் அனுமதி இல்லை. பேன்ட் அணிந்து சென்றால் கூட இரண்டு அங்குலத்திற்கு மடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஒலி  எழுப்பப்படுகின்றது. அதனை வைத்து தியானத்தில் இருந்து வெளிவரலாம். மொத்தத்தில் ஈஷா  தியான மைய தரிசனம் ஒரு Rejuvenating experience.

மருதமலை:

அறுபடை வீடுகள் கொண்ட குமரனின் 'ஏழாவது படைவீடு' எனச் சிறப்பாகப் போற்றப்படும் ஆலயம்தான் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயில் கொங்கு நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 அடி உயரத்திலும், கோவை மாநகரில் இருந்து வடமேற்குத் திசையில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலும் அமையப் பெற்றுள்ளது. கோவை மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு 70 ஆம் எண் பேருந்து வசதி உண்டு.


மூன்று பக்கமும் மலை அரண் சூழப்பெற்ற மருதமலை எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் 'மருதமலை' என அழைக்கப்படுகிறது. மருதமலையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி அளிக்கின்றார்.கடந்த மார்ச் மாதத்தில் தான் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. கோவில் மிக அழகாக  பராமரிப்பு செய்யப்படுகின்றது.

திருக்கோவிலின் ராஜ கோபுரத்தின் வழியாக உள்ள படிக்கட்டிலும், திருக்கோவிலின் தெற்கு புறத்தில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் மூலஸ்தானத்தை அடையலாம். முருகனை தரிசித்துவிட்டு தெற்குப் புற வழியாக கீழ் இறங்கினால் சப்தகன்னியர் சந்நிதி உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் "பாம்பாட்டி சித்தர் சந்நிதி" அமைந்துள்ளது.


மலைக் கோவிலை படிக்கட்டுகள் வழியாகவும், வாகன வசதிகளினூடாகவும் அடையலாம். திருத்தணி கோவில் போலவே, இங்கும் தேவஸ்தான அமைப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் ஏராளம். இங்கு ஒரு கடையில் (கடை முழுவதும்) இலந்தை பழத்தால் ஆன தின்பண்ட வகையறாக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மலையில் கிடைக்கும் இலந்தைப் பழங்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதாகக் கூறினார்கள். பல நாட்களுக்குப் பிறகு இலந்தைப் பழ தின்பண்டங்கள் சுவைத்தோம். மருதமலை முருகன் தரிசனத்தை திவ்யமாக முடித்துவிட்டு மீண்டும் கோவை நோக்கிப் பயணமானோம்.

நண்பரின் திருமண வரவேற்பு, கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி'ஸ் கிளப் - ல். செல்லும் வழியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் Brookfields Mall, Fun Mall ஆகியவைகளையும் பார்த்தோம்.

நண்பரின் திருமண வரவேற்பு முடிந்து  மீண்டும் கோவை காந்திபுரம் ஹோட்டல் அறைக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் பயணத்திற்கு தயாரானோம்.  
Read More

Monday 2 December 2013

படித்ததில் பிடித்தது


இன்று  வலைப்பூவில் படித்ததில் பிடித்தது.

அ முதல் ஔ வரை!

அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ – அவ்வ்வ்வ்!

- தமிழன் என்ற இந்தியன்
Read More

Thursday 26 September 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும்.



இடம்:

டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.



நிகழ்ச்சி நிரல்

நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?
மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
Read More

Friday 20 September 2013

நாய் பாசம்


தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.

4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம்,

"ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை கடித்துவிடும்!!!" 

என்று உரையாடுகின்றார். இதை நாய் பாசம் என்பதெல்லாமல் வேறேன்பது?
Read More

Friday 13 September 2013

தலை காவிரி முதல் கடை காவிரி வரை

குடகு மலையில் உருவாகும் காவிரி பிரம்மாண்டமாக பல மைல் கடந்து, பல நிலங்கள் கடந்து, சில அணைகளுள் அகப்பட்டு, பல ஆற்றோரங்களை கடந்து, பல மனிதர்களை கடந்து, கடை மடைப் பகுதிகளை செம்மையாக்கி கடைசியில் ஆடு தாண்டும் காவிரியாக மாறி கடலில் இணைகிறது.

இந்த காவிரியின் பயணத்தை, 'நடந்தாய் வாழி காவேரி' எனும் நூலில் தி. ஜானகிராமன் மிகவும் அருமையாக, அனுபவப் பூர்வமாக பயணித்து எழுதியிருப்பார். பயணித்த காலம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னதாக இருக்கும். 

சமீபத்தில், அதீதம் தளத்தில் 'விண்ணோடு விரியும் விழிகள் - காவிரியின் கதை' என்ற பெயரில் தலை காவிரி முதல் கடை காவிரி வரையுள்ள பயணத்தை 'ஸ்வர்ண லக்ஷ்மி' அவர்கள் எழுதியுள்ளார். மிக சிறப்பாக படங்களுடனும் 4 பாகமாக விளக்கியுள்ளார். கீழ் காணும் சுட்டிகள் தங்களை கட்டுரைகளுக்கு அழைத்து செல்லும்.





நன்றி: அதீதம், ஸ்வர்ண லக்ஷ்மி.
Read More

Thursday 5 September 2013

மேன்ஷன் வாழ்க்கை கவிதைகள்


மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்"

1. இந்த அறையை நோக்கி
பூமியின் எப்பகுதியிலிருந்தும்
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை

இந்த அறைக்கு
நண்பர் என்றுசொன்ன
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை

பறவையின் குரல்
நாயின் குரல்
வானின் குரல்

எதுவும் தொட்டதில்லை

சூரியனின் கதிருக்குக்
காத்திருந்து காத்திருந்து
மனமொடிந்ததுதான் மிச்சம்

காற்று மட்டும்
அறீயாமல் வந்து
உயிரைக் காப்பாற்றுகிறது

அறையும் நானும்
காத்திருக்கிறோம்
அறிமுகமான
மனித முகம் வேண்டி

2. அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தைத் துரத்திவிடுகிறேன்

எங்களுக்குள் பல ரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனைவிட உசத்தி

செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என
எல்லாம் இந்த அறைக்குள்தான்

அறை என் வீடு
ஆனால் --
வீடு என்பது அறையா

3. வீசிவிட்டுச் சென்ற
ஒரே ஒரு சொல்
என் அறைக்குள்
சுற்றிச் சுற்றி வருகிறது

விர்ர்ர்ர்ரென்று
விஷக்குளவியாய்
மறைந்து திரிந்து
முகத்தில் அடிக்கிறது

ஒடிவிடுகிறது என நினைத்த நிமிஷம்
கதவிடுக்கிலிருந்து வருகிறது

தூங்கும் போதெல்லாம்
பறந்து நிரப்புகிறது
கனவை

மின்விசிறியோடு சுழன்று
நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் மாறி
நிரப்புகிறது அறையை

என் செல்போன் இசையைத்
தன் சிறகோசை கொண்டு
நிரப்புகிறது

நிரப்புகிறது
என் மயிர்க்கால் ஒவ்வொன்றையும்
தன் கொடுக்கு முனையால்

4. வான் நடுவில் தொங்கும்
உறையற்ற கத்தி
எப்போதும் குறிபார்க்கிறது
என் உச்சந்தலையை

காங்கீரிட் கட்டடம்
கடல்மலைகாடு
பூமிச்சுரங்கம்
ஒளிந்து மறைந்தாலும்
விடுவதாய் இல்லை

எங்கு சென்றாலும்
கூடவே வருகிறது

கண்முன்னால் வந்து
கண்ணாமூச்சி காட்டும்
ஓடஓட விரட்டும்
பதுங்கிப் பாயும்
ஒழிந்ததுபோல் போக்குக்காட்டி
மீண்டும் ஒடிவரும்

மனமெங்கும் கத்தி
ஞாபகமாய் உறைய
மனமே கத்தியானது

5. முள் முளைத்த முகமாய்
யார் யார் முகமோ எட்டிப்பார்க்க
என் முகம் மட்டும் வருவதே இல்லை

அவமான முகங்களைத் திறந்து திறந்து
இருக்கலாம் இறுதியில்
எனக்கும் ஒரு முகம்

6. வட்டத்திற்குள்ளோ
சதுரத்திற்குள்ளோ
முள்ளில் மாட்டிய என் நேரம்

7. இரவின் வாசனை
பூமியைப் போர்த்தும்போது
அறை
தானே தைத்துக்கொள்கிறது
தன் வாயை

நிரந்தரமாய் அறிந்தவர்கள்
யாருமில்லை நகரில்
அறியாத முகங்கள் பூதங்களாக
ஒடுங்கிப்போகிறேன் குழந்தையாய்

புறம்பேசுபவன்
பொய்யன்
உளவாளி
பிலிம்காட்டுபவன்
துரோகி
பெண்பித்தன்
தளும்புக்காரன்
அப்பாவி
ஆடம்பரக்காரன்
ஆபத்தானவன்
ஆண்மையற்றவன்

தங்கள் தங்கள்
அடையாளம் ஒட்டி ஒட்டி
சரிபார்க்கின்றனர்
எல்லோரும்

கற்பனை அடையாளங்கள்
என் கழுத்தில்

கண் காணாத்தூரத்தில்
பனை ஒலைக்குள்
பதுங்கிக் கிடக்கும்
என் அடையாளம்

என் அடையாளம்
அறியாமனிதர்கள் அறிய
குறியிடப்படாத துணியாய்
அலைகிறது என் உடல்

8. அறைக்குள்
அறைந்து தள்ளி
பூட்டிவிடுகிற்து இரவு

சுவாசிக்கக் காற்றின்றி
ஒரு பிணம்போல்
கிடக்கிறது என் உடல்

புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்

உடல் கட்டிலில் கிடக்க
மனம்
என்னை விட்டு அகலும்

ஒர் இரவுத்தூரத்தில் மனைவி

தெரிந்த பெண்களின்
முகங்கள் அலைய
கழிகிறது நீண்ட இரவு

என் மனம் உதிர்க்கும்
வார்த்தைகள் பார்க்க
யாருமில்லாத

அறைக்குள்
ஒர் இரவுத் தூரமாக
நிரம்பிக் கிடக்கிறது
மாநகரச் சூன்யம்

9. ஈட்டியால் குத்துங்கள்
பீறிட்டு வழியட்டும் என் பயம்

மறுபடியும் -
ஈட்டியால் குத்துங்கள்
வெளியேறட்டும் பயத்தின் ஆவி

ஆனாலும் அவ்வப்போது
உணவோடு சேர்த்து
பயத்தை விழுங்கிறேன்

தனி அறைக்குள்
பயத்தை விசிறியடிக்கிறது
மின் விசிறி

உடல் முழுக்க முள்ளாய்க் குத்தி நிற்கும்
சொற்களை
ஒவ்வொன்றாய்ப் பிடுங்கிப் போடுகிறேன்
மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது

ஆழத்தில் போய்த்
தைத்துக்கொள்கிறது

பிரமாண்ட நகரின்
சிறிய குடுவைக்குள்
மின்விசிறி
நான்

நன்றி - மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார், சித்தார்த்தா வெளியீடு
Read More

Wednesday 4 September 2013

விளம்பர உலகம்

ஒரு பொருள், சேவை, தகவல் மக்களை சென்றடைய விளம்பரங்கள் இன்றியமையாத வழி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தகவல்கள் பரிமாற்றம் சுவர் ஓவியங்களினாலும், போஸ்டர் பிறகு பத்திரிக்கை, செய்தித் தாள், வானொலி, தொலைக் காட்சி வாயிலாகவும் அதன் பிறகு மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

கீழ்காணும் படத்தில் ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு விளம்பரம். 



இந்த விளம்பரம் சென்னை, கன்னிமாரா நூலகத்தின்  நாளிதழ்/மாத இதழ்  பிரிவில் ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதப் பட்டிருந்தது. அவரின் விளம்பர யுக்தியை கண்டு வியக்காமல் என்ன செய்ய !?...
Read More

Thursday 15 August 2013

67 வது விடுதலை திருநாள்



67 வது விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள்..

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த் 


Read More

Tuesday 6 August 2013

மேட்டூர் அணை - காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம்


கடந்த இரண்டு வருடமாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீரே பார்த்திராத மக்களுக்கு இந்த வருடம் தமிழகத்தில் பருவ மழை மீதமுள்ள நிலையிலும், கர்நாடகத்தில் பெய்த மழையினால் நிரம்பியது மேட்டூர் அணை. அது மட்டுமல்லாது எண்ணற்ற விவசாயிகளின் மனதும் நிறைந்தது.

இந்த நல்ல வேளையில், மேட்டூர் அணை பற்றி....

ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.

மேட்டூர் அணையை வடிவமைத்தவர். அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தர விட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934

அணைக் கட்ட ஆன செலவு: 4.80 கோடி

அணையின் நீளம்: 5.300 அடி

அணையின் கொள்ளளவு: 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம்: 214 அடி

அணையின் அகலம்: 171 அடி

அணையின் சேமிப்பு உயரம்: 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு: 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

நன்றி - தினமலர்
Read More

Saturday 27 July 2013

50 ஆவது பதிவு

50 ஆவது பதிவு:

வலை பதிவு உலகிற்கு வந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதலில் ஆரம்பித்த வலைப்பூவில் எழுத முடியவில்லை. பூர்வ காவேரி எனும் இந்த வலைப்பூவில் 49 இடுகைகளை முடித்து 50 ஆவது இடுகையை பதிவு செய்ய ஊக்கமளித்த கடவுளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல. மேலும், இந்த வலைப்பூவின் பெயர் சூட்டவும், எழுதுவதற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி. 
Read More

ஷாலோம் மேன்ஷன்


ஷாலோம் மேன்ஷன்:

2004 ஆண்டு டிசம்பர் மாதம், Engineering Project செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து இரவு புறப்பட்டு காலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நண்பன் ராகவேந்திரா விற்கு தொடர்பு கொண்து ஷாலோம் மேன்ஷன் எங்கே உள்ளது என்று தொலை பேசியபோது, ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் தபால் நிலையம் அருகே வந்து தொலை பேச சொன்னார்.

மாம்பலம் போஸ்டல் காலனி வரை தேடி விட்டு ஷாலோம் மேன்ஷன் கண்டுபிடிக்க முடியாததால், மறுபடியும் நண்பனுக்கு தொலைபேசியபோது தவறான பாதையில் சென்றுவிட்டதாக கூறவே, அங்கிருந்து விசாரித்து சரியான விலாசத்திற்கு வந்தேன்.

ஷாலோம் மேன்ஷனில் தங்கி Engineering Project முடித்த பிறகு மீண்டும் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2013 மே மாதம் வரை Room No. 42 ல் சென்னை வாழ்க்கையில் பல தரப்பட்ட நிகழ்வுகள், நண்பர்களின் சந்திப்புகள், புதிய நண்பர்களின் அறிமுகங்கள் நடந்தேறின.

மாம்பலம் பகுதி ஓர் அதிசயமான பகுதி. காரணம், ஒரு ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே மனித நெரிசலில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும்; இதர பிரிவினிருந்தும் பிரிக்கின்றது.

மாம்பலம் பகுதி குடியிருப்புக்கு ஏற்ற பகுதி. பேருந்து, ரயில், உணவகங்கள், மார்கெட் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

என்றுமே மறக்க முடியாத பல நினைவுகளை ஷாலோம் மேன்ஷனும் மாம்பலம் பகுதியும் எனக்கு அளித்திருக்கின்றன. 50 ஆவது பதிவில் இதை பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.


Read More

Tuesday 23 July 2013

Mobile Phone Etiquettes

Following is a list of do's and don'ts:

- Do respect those who are with you. When you're engaged face-to-face with others, either in a meeting or a conversation, give them your complete and undivided attention. Avoid texting or taking calls. If a call is important, apologize and ask permission before accepting it.

- Don't yell. The average person talks three times louder on a cellphone than they do in a face-to-face conversation. Always be mindful of your volume.

- Do be a good dining companion. No one wants to be a captive audience to a third-party cellphone conversation, or to sit in silence while their dining companion texts with someone. Always silence and store your phone before being seated. Never put your cellphone on the table.

- Don't ignore universal quiet zones such as the theater, church, the library, your daughter's dance recital and funerals.

- Do let voice mail do its job. When you're in the company of others, let voice mail handle non-urgent calls.

- Don't make wait staff wait. Whether it's your turn in line or time to order at the table, always make yourself available to the server. Making servers and other patrons wait for you to finish a personal phone call is never acceptable. If the call is important, step away from the table or get out of line.

- Don't text and drive. There is no message that is so important.

- Do keep arguments under wraps. Nobody can hear the person on the other end. All they are aware of is a one-sided screaming match a few feet away.

- Don't forget to filter your language. A rule of thumb: If you wouldn't walk through a busy public place with a particular word or comment printed on your T-shirt, don't use it in cellphone conversations.

- Do respect the personal space of others. When you must use your phone in public, try to keep at least 10 feet (three meters) between you and others.

- Do exercise good international calling behavior. The rules of cellphone etiquette vary from country to country.

Good cellphone etiquette is similar to common courtesy. Conversations and text exchanges have a tendency to distract people from what's happening in front of them. Cellphone users should be thoughtful, courteous and respect the people around them.

- The Protocol School of Washington (PSOW)
- PSOW's website is: www.psow.edu
Read More

Wednesday 10 July 2013

குடமுருட்டி - இலங்கை கிளிநொச்சியிலும் ...

குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரிஎன்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது.

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப் பரப்பில் பிரிந்துள்ள நாடுகளில் இவ்வாறு இருப்பது இயற்கை. 

ஒரு தீபகற்பத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் பாயும் நதி, அருகிலிருக்கும் ஒரு தீவிலும் பாய்கின்றது என கேள்விப் படும் போதே ஆச்சர்யமாக இருக்கின்றது. 

இரண்டு காரணங்கள்.

1. நதியின் பெயர் மட்டும் ஒற்றுமையாக இருக்கலாம்.
2.முன்னொரு காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை இணைந்திருந்த நாட்களில் இந்நதி இலங்கை பிரதேசத்தில் பாய்ந்திருக்கலாம்.

இதன் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.தற்போது, குடமுருட்டி கிளிநொச்சியின் அருகே உள்ள பூநகரி எனும் ஊரில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிளிநொச்சியின் பழம்பெறும் கிராமங்களை பூநகரி கொண்டுள்ளது. பூநகரியின் மொட்டைக் கறுப்பன் அரிசி உலகப் பகழ் பெற்றது.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். 


Read More

Saturday 6 July 2013

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு  சென்று வருகிறேன்.

வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன்.

கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு. 

UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது.

"நீ நுழைந்துள்ளது பள்ளிக் கூடத்தின் வகுப்பறைக்குள் மட்டுமல்ல... 
 உன் வாழ்க்கைக்குள்ளும் தான்..."




Read More

Saturday 29 June 2013

History of Spectacles

நல்லா கண்ணைத் துடைச்சுக்கிட்டு பாருங்க... நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான கண்ணாடிகளைப் போட்டு அசத்துறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்... கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக் கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயாராகி வெளியே வர 60 நாட்கள் ஆகின்றன. 'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.

அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.
நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ்.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, என்னை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

இப்படித்தான் நான் உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா?


Read More

Saturday 18 May 2013

மேகமலை - பயணம்



அகரம் நண்பர்கள் மேகமலை பயணத்திற்காக முடிவு செய்த போது 3 நாட்களும் வந்திருந்து விழாவை (ஹி.. ஹி..) பயணத்தை சிறப்பிக்கலாம் என்று நினைத்தேன். வழக்கம் போல அலுவலக பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.

வெள்ளிக் கிழமை இரவு KPN Travels பேருந்து மூலமாக  சின்னமனூர் சென்று, அங்கிருந்து மேகமலை செல்வதாக திட்டம். (நண்பர்கள் அனைவரும் வெள்ளி காலையே மேகமலை சென்றிருந்தனர்). மேகமலையில் BSNL Tower மட்டுமே உண்டு என்பதால் தகவல் தொடர்பு மிகவும் கடினம்.

மேகமலை சென்ற நண்பர்கள், அங்கு நான் எங்கு வந்து சேர வேண்டும், சின்னமனூர் வந்து யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல நினைத்து தகவல் தொடர்பின்மை காரணமாக மிகவும் சிரமப்பட்டார்கள். வெள்ளி இரவு சின்னமனூர் பேருந்து ஏறும் வரை நான் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் முதல் 5 இலக்க கைப்பேசி எண் மட்டும் தான் என்னிடம் இருந்தது.

அதன் பிறகு, பல பிரயத்தனங்களுக்குப் பிறகு சின்னமனூரில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எந்த பேருந்தில் மேகமலை செல்ல வேண்டும், மேகமலையில் எந்த Cottage க்கு வர வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.

சரியாக சனிக் கிழமை  காலை  07:45 மணிக்கு சின்னமனூர் வந்து சேர்ந்தேன். சின்னமனூர் பேருந்து நிலையத்தில் Refresh செய்து கொண்டு 10:00 மணிக்கு மேகமலை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன். (மேகமலை வழியாக இரவங்கலாறு) பேருந்து சரியாக 09:15 மணிக்கெல்லாம் வந்து விட்டது. மலைப் பாதையில் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே. அது மட்டுமல்லாது பேருந்தில் ஏறுவதற்கு முன் ஒப்புகை சீட்டு வாங்க வேண்டும் என்றார்கள். நேரக் காப்பாளர் Rs. 3 பெறுமான சீட்டை Rs. 5 என்றார். வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சரியாக 10:15 க்கு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பொது அப்பாடா என்றிருந்தது.  ஆனால், அங்கு தான் ஒரு Twist.

பேருந்து நேராக ஒரு தனியார் நான்கு சக்கர Workshop க்கு சென்று நின்றது. என்னவென்று விசாரித்தால் முன் பக்க Axle கழன்று விட்டதாகவும் அதனை சரி செய்து கொண்டுதான்  புறப்பட முடியும் என்று கூறினார்கள்.   நல்ல வேளையாக அந்த தவறு கீழேயே கண்டு பிடித்தாகிவிட்டது. அரசு தொலை தூரப் பேருந்துகளை மட்டுமல்லாது மலைப் பாதை பேருந்துகளையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். பேருந்து சரியாக 11:15 மணிக்கு புறப்பட்டது.

சின்னமனூர் - மேகமலை மலைப் பாதை 30 ஆண்டுகளுக்கு முன்பாக போடப் பட்டது என்று கூறினார்கள் நண்பர்கள். அதற்கேற்றார்போல் சாலை மிகவும் பயனற்றுப் போயிருந்தது. 18 கொண்டை ஊசி வளைவுகள். நல்ல கை தேர்ந்த ஓட்டுனர்களால் மட்டுமே வாகனங்களை செலுத்த முடியும். டயர்கள் நல்ல பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். ஒரு வழியாக மதியம்  01:15 மணி அளவில் மலையில் 20 KM கடந்து நண்பர்கள் தங்கியிருந்த "மேகமலை Residency" அமைந்திருக்கின்ற "அந்துவன் Estate" வந்தாகிவிட்டது. நண்பர்கள் என் வருகைக்காக காத்திருந்தனர்.

முதல் நாள் (என்னுடைய...) பயணத் திட்டத்தில் "மகாராஜா மெட்டு" என்ற ஓர் இடத்திற்கு பயணப் பட்டோம். செல்லும் வழி எங்கும் பச்சை கம்பளங்களை விரித்தார்ப் போல் தேயிலைத் தோட்டங்கள். எங்களுடைய பயண முகவர் தேயிலை பயிரிடுதல் தொடங்கி தேனீர் பருகும் வரை ஒவ்வொரு நிலையையும் விளக்கினார். வழியில் மணலாறு, வன்னியாறு ஆகிய இடங்களில் இருந்த சிறு அணைக் கட்டுகளைப் பார்வையிட்டோம். மேகமலைப் பகுதி ஹைவேவிஸ் என்று அழைக்கப்படுகிறது. 

மேகமலைப் பகுதியில் மொத்தமே 5 க்கும் குறைவான Cottage கள் உள்ளன. அவற்றில் அரசின் பயணியர் மாளிகையும், தாங்கும் விடுதியும் அடக்கம். அது மட்டுமல்லாது மிகவும் குறைவான அளவிலேயே Tea Shop களும் உணவு விடுதிகளும் உள்ளன.  

மகாராஜா மெட்டு பகுதியை அடைந்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு மலையேறத் தொடங்கினோம். சுமார் 1.5 KM மலையேறிய பிறகு மகாராஜா மெட்டு வந்தடைந்தோம். அங்கிருந்து பார்த்தால் தேனி  நகரம், போடி நகரம் தெரிகின்றது மற்றொரு புறம் கேரளாவின் தேக்கடி யைக் காண்பிக்கிறார்கள். அவ்வளவு வுயரத்தில் ஒரு சிதிலமடைந்த கோவில் ஒன்றும், சிறு கோவில் ஒன்றும் அரசின் நீரேற்று நிலையம் ஒன்றும் உள்ளது. உண்மையிலேயே அவ்வளவு ரம்மியமான இடம். நல்ல சீதோஷ்ண நிலை. 360 Degree View ல் தாராளமாக படம் எடுக்கலாம். 

சற்று இளைப்பாறிவிட்டு, அங்கிருந்து கீழிறங்கி எங்களுடைய மதிய (மாலை) உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பச்சை தேயிலைத் தொட்டங்களினூடே பயணப் பட்டு, தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலை களையும் பார்த்து விட்டு எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம். 

அன்றிரவு உணவை முடித்துக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் ஒரு புதிய வகையான Card Game "UNO" கற்றுக் கொண்டு விளையாடி விட்டு, Night Trekking எனப்படும் இரவு நேர காட்டுப் பயணத்தை மேற்கொண்டு விட்டு உறங்கலானோம்.

மறுநாள் காலை மிகவும் முன்னதாகவே எழுந்து தயாராகி மீண்டும் ஒரு "Road Walk" சென்றோம். அந்த காலை வேலையில் மேகமலை என்ற பெயருக்கேற்ப மேகங்கள் மலைகளைத் தொட்டுக் கொண்டு செல்கின்ற காட்சி  வார்த்தைகளினால் விவரிக்க முடியாத அனுபவமாக இருந்தது.

மேகமலைக்கு விடை கொடுத்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கி சின்னமனூர் வந்தோம். அதுவரை மிகவும் பொறுமையாக வாகனத்தை ஓட்டி வந்த எங்கள் ஓட்டுனர் சீரான சாலையைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு வாகனத்தை தேக்கடி நோக்கி செலுத்தினார். 

வழியில் குமிளியில் காவல் சோதனைகளை முடித்துக் கொண்டு "பெரியார் புலிகள் சரணாலயம்" வந்து செர்ந்தோம். முல்லைப் பெரியார் அணை இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. Boating செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கலானோம். பெரியார் ஆறு கிட்டத்தட்ட 145 அடி ஆழம் கொண்டது. இந்த ஆற்றில் தான் படகு சவாரி செய்யப்போகின்றோம். நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு 01:45 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யக் காத்திருந்தோம். 

காத்திருந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த ஒரு சோக நிகழ்வான படகு கவிழ்ந்து 40 பேர் பலியான சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 2 வகையான படகுகள்  சவாரிக்காக பயன் படுத்தப் படுகின்றன. அளவில் சிறியது மற்றும் பெரியது. இரண்டு இரண்டு அடுக்குகளை உடையது. படகில் எங்களுக்கான இருக்கைகள் முதல் அடுக்கில் இருந்தது. பாதுகாப்புக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1:30 மணி நேரப் படகு சவாரி இது.

படகு சவாரி தொடங்கும் நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. ரம்மியமான ஒரு சூழல் அது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். நடு நடுவே உயர்ந்த மரங்கள். தூரத்தில் காட்டு விலங்கினங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெரியார் ஆற்றின் நடுவே ஒரு Guest House ம் உண்டு. எங்கு நோக்கினும் தண்ணீர் மற்றும் மலைகள். 01:30 மணி நேர பயணத்திற்கு பிறகு படகு சவாரி நிறைவுற்றது. 

தேக்கடியில் இருந்து குமிளி வந்து வீட்டுக்குத் தேவையான திராட்சை, மிளகு மற்றும் இதர வகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தேனி நோக்கி புறப் பட்டோம். தேனியில் மாலை உணவு அருந்திவிட்டு 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.




Read More

Friday 29 March 2013

கை பேசி


கிட்டத்தட்ட கை இருக்கும் அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது கை பேசி. (சிலர் ஒன்றுக்கும் மேலாக). உணவு, உடை, இருப்பிடம், கை பேசி என அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது கை பேசி. விஷயத்துக்கு வருவோம்.....

கை பேசியின் பயன்கள் எண்ணிலங்கா. பயன்படுத்தும் வயது வரம்பு தற்போது > 3 ஆக இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல் அல்லது உரையாடல் என்ற அடிப்படை தேவைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பல விஷயங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. வயதுக்கேற்ப அதன் தேவைகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • மற்றவர்களை தொடர்பு கொள்ளுதல்,
  • குறுஞ்செய்திகள்
  • சிறு வயதினர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விளையாடும் விளையாட்டுக்கள்.
  • இணையப் பயன்பாடு
  • புகைப்படங்கள் எடுத்தல் .....

இன்னும் எத்தனையோ... 
Read More

Wednesday 13 March 2013

மஹா சிவராத்திரி - ஸ்ரீ காளஹஸ்தி தரிசனம்


10.03.2013 - மஹா சிவராத்திரி யை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி பெருமானை தரிசிக்க முந்தைய நாள் மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தி வந்தடைந்தோம். 

சிவராத்திரிக்கு முந்தைய நாள் என்பதால் தேவஸ்தான தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் விடுதிகளுக்கோ கொழுத்த கொண்டாட்டம். அறை வாடகையெல்லாம் இரு மடங்கு உயர்த்தியிருந்தனர். நமக்கு வேறு வழி இல்லாது இரு மடங்கு வாடகையில் ஒரு அறையை பிடித்தோம். மாட வீதிகளில் விநாயகர், முருகர், ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

சிவராத்திரி அன்று (11.03.13) காலை 6 மணிக்கு கோவிலுக்குள் வந்து மதியம் 12 மணியளவில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்தோம். சிவராத்திரியென்பதால் எந்த தோஷ, நிவாரண பூஜையும் இல்லை என்று கூறியிருந்தனர். 6 மணி நேரம் வரிசை ஒரு பாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சன்னதியை அடைந்தது. (கிட்டத் தட்ட ஒரு 4 கி. மீ இருக்கும் கோவிலுக்குள்ளேயே சுற்றியது). வயதானவர்களும், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். 

சிவராத்திரியை முன்னிட்டு மாட வீதிகள், பொன்முகலிகை ஆறு, கண்ணப்பர் மலை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அவை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.  
Read More

Tuesday 12 March 2013

பாரதி !!!

"யோக சக்தி" என்னும் தொகுப்பில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் கவிதை, பல நேரத்தில் வாழ்க்கையில் தூண்டுகோலாக அமைந்தது.


தேடிச் சோறுநிதந் தின்று - பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் 
வாடித் துன்பமிக உழன்று - பிறர் 
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி 
என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் 
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்!

Read More

Tuesday 26 February 2013

Think out of the box - 2


Question 1:
You are driving along in your car on a wild, stormy night, it's raining heavily, when suddenly you pass by a bus stop, and you see three people waiting for a bus:
  • An old lady who looks as if she is about to die.
  • An old friend who once saved your life.
  • The perfect partner you have been dreaming about.

Which one would you choose to offer a ride to, knowing very well that there could only be one passenger in your car? 
  • You could pick up the old lady, because she is going to die, and thus you should save her first;
  • You could take the old friend because he once saved your life; this would be the perfect chance to! Pay him back.
  • However, you may never be able to find your perfect mate again.

Answer:

"I would give the car keys to my Old friend and let him take the lady to the hospital. I would stay behind and wait for the bus with the partner of my dreams."

Question 2:
What will you do if I run away with your sister?"

Answer: "I will not get a better match for my sister than you sir"

Question 3:
Interviewer (to a student girl candidate) - What is one morning you woke up & found that you were pregnant.

Answer: Girl - I will be very excited and take an off, to celebrate with my husband.

Question 4:
Interviewer: He ordered a cup of coffee for the candidate. Coffee arrived kept before the candidate, then he asked what is before you?
Candidate: Instantly replied "Tea"
He got selected. You know how and why did he say "TEA" when he knows very well that coffee was kept before.

Answer:  
The question was "What is before you (U - alphabet) Reply was "TEA" ( T - alphabet) Alphabet "T" was before Alphabet "U"

Question 5:
Where Lord Rama would have celebrated his "First Diwali"? People will start thinking of Ayodya, Mitila [Janaki's place], Lanka etc...

Answer:
But the logic is, Diwali was a celebrated as a mark of Lord Krishna Killing Narakasura. In Dusavataar, Krishnavathaar comes after Raamavathaar. So, Lord Rama would not have celebrated the Diwali At all!

Question 6:
The interviewer asked to the candidate "This is your last question of the interview. Please tell me the exact position of the center of this table where u have kept your files."

Candidate confidently put one of his fingers at some point at the table and told that this was the central point at the table.
Interviewer asked how did u get to know that this being the central point of this table, then he answers quickly that "Sir you are not likely to ask any more question, as it was the last question that u promised to ask....."
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena