Saturday 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)

இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம். 

திருப்பதி RTC பேருந்து நிலையத்தில் திருமலைக்கு செல்லும் அரசுப் பேருந்திற்கு மாற்றலாகி திருமலைக்கு புறப்பட்டோம். ஒவ்வொரு முறை திருமலைக்கு பயணப்படும் போதும் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றத்தை காண முடியும். இம்முறை திருமலைக்கு சென்ற அரசுப் பேருந்தில்  "ஓம் நமோ வேங்கடேசாய.." மந்திரம் ஒலித்துக்குக் கொண்டே இருந்தது. இந்த மந்திர உச்சரிப்பு நம்மை திருமலைக்கு செல்லும் வழியெங்கும் மனதை  ஆன்மீகத்தில் ஒருங்கிணைப்படுத்தியது. மேலும், மலைச் சாலை தொடங்கியதுமே ஒவ்வொருவரும் சோதனைக்குட்படுத்தியபிறகே பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை ராம் பக்கீஜா பேருந்து  நிலையத்தில் இறக்கி விடப்பட்டோம். தலை மொட்டை அடித்துக் கொள்ள சென்றவர்கள் திரும்பும் வரை அங்கேயே காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு கை பேசி, செருப்புகள் மற்றும் நம்மிடம் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களை அங்கு ஒரு கடையில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இனி தரிசனம் முடிந்த பிறகுதான் இதனை திரும்ப எடுக்க முடியும்.

திருமலையில் எதாவது ஒரு கட்டிட, சாலை மற்றும் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கோவிலின் முன்புறம் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு முன்  திருமலை வந்த பொது கோவிலின் முன்னே சூடம் ஏற்றும் இடத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை இருபுறமும் கடைகள் இருக்கும். இம்முறை ஆஞ்சநேயர் கோவில் வரை தரை தான். மிகவும் விஸ்தாரமாக காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு இடது புறம் உள்ள வைகுண்டம் Q காம்ப்ளெக்ஸ் க்கு சென்று சுற்றுலா அதிகாரி Rs. 300/- அனுமதி சீட்டு வாங்கி வரும் வரை காத்திருந்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக மணி 12 அளவில் Q காம்ப்ளெக்ஸ் ன் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். வழக்கம் போல அறைகளில் மக்கள் கூட்டம். நாங்கள் 25 ஆம் எண் அறையிலிருந்து வெளியேறி Q காம்ப்ளெக்ஸ் முழுவதும் நடந்து (ஊர்ந்து!) சென்று மீண்டும் கோவிலின் இடது புற வழியாக திரும்பி முன்புறமான மஹா  துவாரம் என்றழைக்கப்படும் பிரதான வாயிலில் நுழைந்தோம்.

கோவிலினுள் அனைத்து மண்டபங்களும் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கொடிமரம் தாண்டி மீண்டும் ஒரு சிறு கோபுரம் வழியாக மூலஸ்தானம் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அதுவரை பொறுமையாக வந்த மக்கள் அதற்குப் பிறகு தள்ளு முள்ளுதான். கிட்ட தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு ஏழுமலையானை சுமார் 1 நிமிடம் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலின் உள்ளே இருந்து வெளியேறினோம்.

சுற்றுலா அதிகாரி கூறியது போல கோவிலின் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு அவரவர் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் ராம் பக்கீஜா பேருந்து நிலையத்திற்கு திரும்பி உடமைகளை பெற்றுக் கொண்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.

திருப்பதி வந்தவுடன் மதிய உணவு எடுத்துக் கொள்ள திட்டம். மணி 4.45. எங்களுடைய அடுத்தப் பயணத்திட்டத்தில் திருச்சானூர் அலமேலுமங்கை கோவில். இந்த கோவிலில் மாலை 5.30 மணியிலிருந்து 07.00 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது. இந்த காரணத்தை கொண்டு மதிய உணவை புறந்தள்ளி விட்டு Rs. 100/- பெறுமான அனுமதி சீட்டு வாங்கி 05.30 மணிக்கு முன்னதாகவே தரிசனம் முடித்தாயிற்று. திருச்சானூர் கோவிலில் Rs. 100/- அனுமதி சீட்டிற்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சென்னை திரும்பும் வழியில் திருத்தணியில் எங்களுடைய மதிய(மாலை) உணவை அருந்தினோம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் ஹிந்தி  (தெரிந்த வரை!) மொழிகளில் பலரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 

திருமலை-திருப்பதி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணி, திருவள்ளூர், போரூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


Read More

Saturday 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2


 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள். 

சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து சேர்ந்தோம். Hotel நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகான அமைப்புடன் இருந்தது. ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துவிட்டு  அடுத்தக் கட்ட உள்ளூர் பயணத்திற்கு தயாரானோம். Hotel - அறையினில் இருந்து உதகை ரம்மியமாக காட்சி அளித்தது. வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது.


Hotel அறையிலிருந்து வெளியில் வந்தவுடன் புதிய சீதோஷன நிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மழை மற்றும் குளிருக்கு இதமான ஆடைகளையே அணிந்திருந்தோம் இருந்தாலும் நவம்பர் மாதக் குளிரைத் தாங்கும் வகையில் குளிருக்கேற்ற அணிகலன்களை வாங்கி அணிந்துகொண்டோம்.

இருசக்கர வாகனத்தை வாடகை அமர்த்திக் கொண்டு உள்ளூரில் உள்ள சில இடங்களை கண்டு களிக்கலாம் என்று திட்டம். அதேபோல் தலா  ஒரு Thunderbird, Pulser மற்றும் Dio வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை வாடகை வாகனங்களின் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவு தனி. நமது ஓட்டுனர் உரிமங்களை சரி செய்த பிறகே வாகனங்களை அளிக்கின்றனர். (ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து கொள்கின்றனர் அத்தாட்சிக்காக)

அனைவரும் அவரவர் வண்டிகளில் உதகை நகர ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தோம், ஏரியில் படகுச் சவாரி செய்வதற்காக. மழை மீண்டும் குறுக்கிடவே ஏற்கனவே குளிரில் இருந்த நாங்கள் ஓரமாக நின்று மழை முழுவதுமாக நிற்கும் வரை காத்திருந்தோம். பனி மூடிய அந்த மாலைப் பொழுது மிகவும் இதமாக இருந்தது. மழை நின்ற பிறகு முதலில் மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் ஒரு தனியாரினுடையது. ரூ. 20 நுழைவுக் கட்டணம், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பலவேறு வகைகளில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மெழுகு அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் உதகை ஏரி நோக்கி பயணித்தோம். மழை தூறிக் கொண்டிருக்கவே படகுச் சவாரி செய்ய முடியாது என்று ஏரியின் அழகை கண்டு ரசித்தோம். உதகை ஏரியில் மோட்டார் விசைப் படகு, துடுப்புப் படகு, கால் மிதிப் படகு என்று பல்வேறு வகைகளில் படகுச் சவாரி செய்யலாம். எரிக்கரையில் ஏராளமான கடைகள் மற்றும் அதற்க்கேற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள். அந்த இதமானக் குளிருக்கு இதமாக சூடான ஊட்டி மிளகாய் பஜ்ஜி வாங்கி சுவைத்தோம்.


மீண்டும் அவரவர் வண்டிகளில் உதகை நகரச் சாலைகளில் பயணித்து வண்டியை ஒப்படைத்துவிட்டு எங்களது அறையை நோக்கி நடக்கத் துவங்கினோம. மேலும், வீட்டுக்கு தேவையான தேயிலை மற்றும் யூக்கலிப்டஸ் தைலங்களையும் உதகை கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொண்டு அறையை சென்றடைந்தோம். இரவு உணவை முடித்து உறங்கலானோம் அடுத்தநாள் திட்டங்களை யோசித்துக்கொண்டே.

முதல் நாள் ஹோட்டல் மேலாளரிடமும், வெளியில் சில உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்களிடமும்  விசாரித்து உதகை உள்ளூர் இடங்கள், பைகாரா மற்றும் முதுமலை வனவிலங்கு சரணாலயம் செல்ல வண்டிக்கு முன் பதிவு செய்திருந்தோம். காலை சரியாக 9 மணிக்கு Hotel அறையை காலி செய்துவிட்டு முதல்நாள் ஏற்பாடு செய்திருந்து வண்டியில் பயணம் செய்ய தயாரானோம்.

மிக இதமான மழையுடன்தான் எங்களுடைய பயணத்தை துவக்கினோம். முதலில் சாக்லேட் அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். இதுவும் ஒரு தனியார் வசமான அருங்காட்சியகம் தான் (சாக்லேட் கடை). நுழைவுக் கட்டணம் ரூ. 20. நல்ல கலைப் பொருட்கள் சாக்லேட் மற்றும் வெள்ளை நிறத்திலான சாக்லேட் வகைகளில் செய்து வைத்திருந்தனர். முடிவில் சாக்லேட் துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நமக்குத் தேவையான சாக்லேட் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஒரு Marketing technique என்று தோன்றியது.

பைகாரா செல்லும் வழியில், Pine Forest எனப்படும் ஊசியிலைக் காடுகளை பார்த்து ரசித்தோம்.பெரிய பெரிய மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துள்ளது போல இருந்தது. புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். இந்த மரங்கள் வரிசையின் முடிவில் காமராஜர் சாகர் அணை உள்ளதாக வண்டி ஓட்டுனர் கூறினார். மேலும், பல திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 9th Mile என்ற இடத்தில் சில மணித்துளிகள் செலவு செய்துவிட்டு பைகாரா நோக்கிப் புறப்பட்டோம்.


பைகாரா என்னும் இடத்தில் உருவாகும் பைகாரா ஆறு, அருவியாக விழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக  நீர் மின்சாரம் இங்கு எடுக்கப்படுகிறது. உதகை-கூடலூர் சாலையில் பைகாரா ஆற்றின் குறுக்கே பைகாரா அணை ஒன்றும்  கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சாலையிலிருந்தே பைகாரா அணை, மட்டும் அருவியைப்  பார்க்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பைகாரா ஆற்றின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக படகுச் சவாரி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அங்கேயும் படகுச் சவாரி செய்ய முடியாமல் ஆற்றின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம். பைகாரா ஆறு இந்தியாவின் வரைபடம் போல தோற்றமளிக்கின்றது.


பைகாராவில் இருந்து  கூடலூர் வழியாக முதுமலை சென்றடைந்தோம். முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் எல்லையிலிருந்து தொடங்கி கர்நாடக மற்றும் கேரளா எல்லை வரை விரிகின்றது. 1940-ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகம் இதுவேயாகும். முதுமலை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. மேலும் இந்தக் காட்டுப்பகுதியில் யானை, மான்கள், சிறுத்தைகள், கரடிகள் காட்டுப்பன்றிகள், முள்ளம்  பல வகையான உயிரினங்கள் இருப்பதாக கூறி இருந்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக Tempo Traveller வண்டியில் காட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணி நேரப் பயணத்திற்கு ரூ. 150 வசூலிக்கின்றனர். மேலும், முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு காட்சியகமும் அரசு அமைத்துள்ளது.



மேலும், திறந்த வெளி ஜீப்பில் காட்டினுள்ளே சென்று வன உயிரினங்களை பார்க்க முடியும். அதற்க்கான வசதியுடன் பல ஜீப்புகள் காத்திருக்கின்றன. 1.30 நிமிடப் பயணம். அரசு வண்டியில் சென்றால் செல்ல முடியாத சத்தியமங்கலம் வனப்பகுதியையும், மாயோர் என்னும் சிற்றுரையும் அங்கு ஓடும் அழகான நதியையும் காண முடிகின்றது. 10 பேர் அமரக் கூடிய ஜீப்பிற்கு ரூ. 800 கேட்கின்றனர். காட்டுவழிப் பயணம் என்பதால் அதன் சுவாரஸ்யத்தை கண்டு களிக்க இந்த தொகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாயோர் நதி யில் ஒரு சிறிய தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தை மிக அருகில் இருந்து கண்டு களிக்க முடிகின்றது. இந்த நதி பவானி ஆற்றுடன் கலப்பதாக கூறினார்கள். 1.30 மணி நேர ஜீப் பயணத்தில் நாங்கள் யானை, மான்கள், மயில்கள் மற்றும் லங்கூர் வகை குரங்குகளை  மட்டுமே பார்க்க முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வாசகம் பலித்திருந்தது. அந்த வாசகம், "அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே மிருகங்களை காண முடியும்", "Animal sight-seeing is the matter of luck".



முதுமலையில் தாவரங்கள், காடு மற்றும் விலங்குகளை கண்டு ரசித்த பிறகு மசினகுடி, தலைகுந்தா  வழியாக  26 கொண்டை ஊசி திருப்பங்கள் உடைய சாலையில் மீண்டும் உதகை வந்தடைந்தோம். ரம்மியமான சாலை அப்போதுதான் போட்டு முடிக்கப்பட்டிருந்தது. உதகையில் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 2 நாட்களுக்கான பயணத்தை மீண்டும் நினைத்துக்கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.  
Read More

Thursday 5 December 2013

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள்

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள் என்னும் தலைப்பில் அதிஷா அவர்கள் அவரின் வலைப் பதிவினில் பகிர்ந்திருந்தார். அந்தப் பட்டியல் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. (நன்றி: அதிஷா, பா. ரா)

நூறு நூல்களின் பெயர் மட்டுமின்றி அதன் சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் தரவரிசைப் படி அமைக்கப்படவில்லை. சென்னை புத்தக காட்சி 2014 சமயத்தில் இந்த நூல்களின் பட்டியல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்,

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.
Read More

Wednesday 4 December 2013

சென்னை புத்தக கண்காட்சி - 2014

சென்னை புத்தக கண்காட்சி - 2014

இடம்: 

YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035

நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014

இம்முறை பல போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக பபாசி இணையதளம் அறிவிக்கின்றது. போட்டிகளின் விபரங்கள்,

1. சிறுகதை போட்டி 
2. குறும்படப்  போட்டி
3. ஓவியப் போட்டி
4. பேச்சுப் போட்டி 

மேலும் விபரங்களுக்கு http://www.bapasi.com/
Read More

கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US  Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.  

துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான். அனைவருக்கும் அவரவர் விருப்ப செய்தித் தாள், காபி (அ) டீ. காலை நேர ரயில் என்பதால் காலை சிற்றுண்டி, மதிய உணவு அனைத்தும் ரயிலினுள்ளேயே. ரயில் ஒன்றும் அத்தனை வேகமில்லை. இடையில் தொழில்நுட்ப காரணங்களுகாக ஈரோடு சந்திப்பில் நிறுத்தப் படுகிறது. சரியான நேரத்தில் கோவை வந்தடைந்தோம்.

பயணத்தின் போதே, கோவையில் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியலிட்டு அதற்கான வண்டியையும் ஏற்பாடு செய்தாயிற்று. ஈஷா யோகா மையம் மற்றும் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு திருமண நிகழ்வுக்கு செல்வதாக திட்டம். 

கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி  பயணமானோம்.கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை வெளியிலிருந்தே தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

ஈஷா தியான மையம்:

ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும்   உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு.

தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு  கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது. மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும். இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரிசிக்க முடியும்.

இந்த தீர்தக்குண்ட அமைப்பின் தரிசனம் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தியது மட்டுமல்லாது ஒரு ஆன்மீக அனுபவத்தை அளித்தது. தியான லிங்க மண்டபத்தினுள் ஒரு நபர் நுழையத் தேவையான ஆன்மீக மனதை இந்த தரிசனம் கொடுக்கின்றது. இந்த தீர்த்தக்குண்டமானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தக்குண்டத்தில் தரிசனம் முடிந்தபின் தியான மையத்தினுள் செல்லும் முன்பாக லிங்க பைரவி ஆலய தரிசனம்.  லிங்க பைரவி ஆலயத்தின் முன்னே முப்பெரும் தேவர்களின் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன தத்ரூபமாக.

இவையனைத்தையும் தரிசித்துவிட்டு ஈஷா தியான லிங்க மண்டபத்தினிற்குள் அனுமதிக்கப்படுகின்றோம். அரை வட்ட வடிவில் ஒரு DOM  அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட தியான லிங்கத்தை சுற்றி பலரும் தியானம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். எந்தவிதமான சப்தம் எழுப்பும் பொருட்களுக்கும் தியான லிங்க மையத்திற்குள் அனுமதி இல்லை. பேன்ட் அணிந்து சென்றால் கூட இரண்டு அங்குலத்திற்கு மடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஒலி  எழுப்பப்படுகின்றது. அதனை வைத்து தியானத்தில் இருந்து வெளிவரலாம். மொத்தத்தில் ஈஷா  தியான மைய தரிசனம் ஒரு Rejuvenating experience.

மருதமலை:

அறுபடை வீடுகள் கொண்ட குமரனின் 'ஏழாவது படைவீடு' எனச் சிறப்பாகப் போற்றப்படும் ஆலயம்தான் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயில் கொங்கு நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 அடி உயரத்திலும், கோவை மாநகரில் இருந்து வடமேற்குத் திசையில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலும் அமையப் பெற்றுள்ளது. கோவை மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு 70 ஆம் எண் பேருந்து வசதி உண்டு.


மூன்று பக்கமும் மலை அரண் சூழப்பெற்ற மருதமலை எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் 'மருதமலை' என அழைக்கப்படுகிறது. மருதமலையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி அளிக்கின்றார்.கடந்த மார்ச் மாதத்தில் தான் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. கோவில் மிக அழகாக  பராமரிப்பு செய்யப்படுகின்றது.

திருக்கோவிலின் ராஜ கோபுரத்தின் வழியாக உள்ள படிக்கட்டிலும், திருக்கோவிலின் தெற்கு புறத்தில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் மூலஸ்தானத்தை அடையலாம். முருகனை தரிசித்துவிட்டு தெற்குப் புற வழியாக கீழ் இறங்கினால் சப்தகன்னியர் சந்நிதி உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் "பாம்பாட்டி சித்தர் சந்நிதி" அமைந்துள்ளது.


மலைக் கோவிலை படிக்கட்டுகள் வழியாகவும், வாகன வசதிகளினூடாகவும் அடையலாம். திருத்தணி கோவில் போலவே, இங்கும் தேவஸ்தான அமைப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் ஏராளம். இங்கு ஒரு கடையில் (கடை முழுவதும்) இலந்தை பழத்தால் ஆன தின்பண்ட வகையறாக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மலையில் கிடைக்கும் இலந்தைப் பழங்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதாகக் கூறினார்கள். பல நாட்களுக்குப் பிறகு இலந்தைப் பழ தின்பண்டங்கள் சுவைத்தோம். மருதமலை முருகன் தரிசனத்தை திவ்யமாக முடித்துவிட்டு மீண்டும் கோவை நோக்கிப் பயணமானோம்.

நண்பரின் திருமண வரவேற்பு, கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி'ஸ் கிளப் - ல். செல்லும் வழியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் Brookfields Mall, Fun Mall ஆகியவைகளையும் பார்த்தோம்.

நண்பரின் திருமண வரவேற்பு முடிந்து  மீண்டும் கோவை காந்திபுரம் ஹோட்டல் அறைக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் பயணத்திற்கு தயாரானோம்.  
Read More

Monday 2 December 2013

படித்ததில் பிடித்தது


இன்று  வலைப்பூவில் படித்ததில் பிடித்தது.

அ முதல் ஔ வரை!

அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ – அவ்வ்வ்வ்!

- தமிழன் என்ற இந்தியன்
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena