Thursday 5 September 2013

மேன்ஷன் வாழ்க்கை கவிதைகள்


மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்"

1. இந்த அறையை நோக்கி
பூமியின் எப்பகுதியிலிருந்தும்
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை

இந்த அறைக்கு
நண்பர் என்றுசொன்ன
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை

பறவையின் குரல்
நாயின் குரல்
வானின் குரல்

எதுவும் தொட்டதில்லை

சூரியனின் கதிருக்குக்
காத்திருந்து காத்திருந்து
மனமொடிந்ததுதான் மிச்சம்

காற்று மட்டும்
அறீயாமல் வந்து
உயிரைக் காப்பாற்றுகிறது

அறையும் நானும்
காத்திருக்கிறோம்
அறிமுகமான
மனித முகம் வேண்டி

2. அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தைத் துரத்திவிடுகிறேன்

எங்களுக்குள் பல ரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனைவிட உசத்தி

செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என
எல்லாம் இந்த அறைக்குள்தான்

அறை என் வீடு
ஆனால் --
வீடு என்பது அறையா

3. வீசிவிட்டுச் சென்ற
ஒரே ஒரு சொல்
என் அறைக்குள்
சுற்றிச் சுற்றி வருகிறது

விர்ர்ர்ர்ரென்று
விஷக்குளவியாய்
மறைந்து திரிந்து
முகத்தில் அடிக்கிறது

ஒடிவிடுகிறது என நினைத்த நிமிஷம்
கதவிடுக்கிலிருந்து வருகிறது

தூங்கும் போதெல்லாம்
பறந்து நிரப்புகிறது
கனவை

மின்விசிறியோடு சுழன்று
நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் மாறி
நிரப்புகிறது அறையை

என் செல்போன் இசையைத்
தன் சிறகோசை கொண்டு
நிரப்புகிறது

நிரப்புகிறது
என் மயிர்க்கால் ஒவ்வொன்றையும்
தன் கொடுக்கு முனையால்

4. வான் நடுவில் தொங்கும்
உறையற்ற கத்தி
எப்போதும் குறிபார்க்கிறது
என் உச்சந்தலையை

காங்கீரிட் கட்டடம்
கடல்மலைகாடு
பூமிச்சுரங்கம்
ஒளிந்து மறைந்தாலும்
விடுவதாய் இல்லை

எங்கு சென்றாலும்
கூடவே வருகிறது

கண்முன்னால் வந்து
கண்ணாமூச்சி காட்டும்
ஓடஓட விரட்டும்
பதுங்கிப் பாயும்
ஒழிந்ததுபோல் போக்குக்காட்டி
மீண்டும் ஒடிவரும்

மனமெங்கும் கத்தி
ஞாபகமாய் உறைய
மனமே கத்தியானது

5. முள் முளைத்த முகமாய்
யார் யார் முகமோ எட்டிப்பார்க்க
என் முகம் மட்டும் வருவதே இல்லை

அவமான முகங்களைத் திறந்து திறந்து
இருக்கலாம் இறுதியில்
எனக்கும் ஒரு முகம்

6. வட்டத்திற்குள்ளோ
சதுரத்திற்குள்ளோ
முள்ளில் மாட்டிய என் நேரம்

7. இரவின் வாசனை
பூமியைப் போர்த்தும்போது
அறை
தானே தைத்துக்கொள்கிறது
தன் வாயை

நிரந்தரமாய் அறிந்தவர்கள்
யாருமில்லை நகரில்
அறியாத முகங்கள் பூதங்களாக
ஒடுங்கிப்போகிறேன் குழந்தையாய்

புறம்பேசுபவன்
பொய்யன்
உளவாளி
பிலிம்காட்டுபவன்
துரோகி
பெண்பித்தன்
தளும்புக்காரன்
அப்பாவி
ஆடம்பரக்காரன்
ஆபத்தானவன்
ஆண்மையற்றவன்

தங்கள் தங்கள்
அடையாளம் ஒட்டி ஒட்டி
சரிபார்க்கின்றனர்
எல்லோரும்

கற்பனை அடையாளங்கள்
என் கழுத்தில்

கண் காணாத்தூரத்தில்
பனை ஒலைக்குள்
பதுங்கிக் கிடக்கும்
என் அடையாளம்

என் அடையாளம்
அறியாமனிதர்கள் அறிய
குறியிடப்படாத துணியாய்
அலைகிறது என் உடல்

8. அறைக்குள்
அறைந்து தள்ளி
பூட்டிவிடுகிற்து இரவு

சுவாசிக்கக் காற்றின்றி
ஒரு பிணம்போல்
கிடக்கிறது என் உடல்

புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்

உடல் கட்டிலில் கிடக்க
மனம்
என்னை விட்டு அகலும்

ஒர் இரவுத்தூரத்தில் மனைவி

தெரிந்த பெண்களின்
முகங்கள் அலைய
கழிகிறது நீண்ட இரவு

என் மனம் உதிர்க்கும்
வார்த்தைகள் பார்க்க
யாருமில்லாத

அறைக்குள்
ஒர் இரவுத் தூரமாக
நிரம்பிக் கிடக்கிறது
மாநகரச் சூன்யம்

9. ஈட்டியால் குத்துங்கள்
பீறிட்டு வழியட்டும் என் பயம்

மறுபடியும் -
ஈட்டியால் குத்துங்கள்
வெளியேறட்டும் பயத்தின் ஆவி

ஆனாலும் அவ்வப்போது
உணவோடு சேர்த்து
பயத்தை விழுங்கிறேன்

தனி அறைக்குள்
பயத்தை விசிறியடிக்கிறது
மின் விசிறி

உடல் முழுக்க முள்ளாய்க் குத்தி நிற்கும்
சொற்களை
ஒவ்வொன்றாய்ப் பிடுங்கிப் போடுகிறேன்
மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது

ஆழத்தில் போய்த்
தைத்துக்கொள்கிறது

பிரமாண்ட நகரின்
சிறிய குடுவைக்குள்
மின்விசிறி
நான்

நன்றி - மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார், சித்தார்த்தா வெளியீடு

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena