Sunday, 5 June 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 2

கோவை - தடாகம் - ஆனைகட்டி என கேரளா எல்லையை தாண்டி, அங்கிருந்து அகலி வழியாக அட்டபட்டி செல்லும் சாலை இது. கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப் படும் Reserved Forest -ல் மலை பாதையில் பயணமானோம். Gods Own Country என சும்மாவா அழைக்கின்றார்கள்!! வழியெங்கும் மரங்கள் பசுமை மட்டுமே. மலைப்பாதை அத்தனை சுலபமாக இல்லை குறுகிய திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என கடினம் தான். 

தாவளம் வந்தாயிற்று. Resort - க்கு செல்ல வழி சொல்ல பணியாளர் வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதலின்படி மேலும் கரடு முரடான மலை சரிவான சாலையில் பயணித்து Resort வந்தடைந்தோம். 

ஓரளவுக்கு வெயிலின் தாக்கம் தணிந்து மலை - மரம் - காற்று - சில்லென்ற சீதோஷண நிலைபாட்டுக்கு மாறியிருந்தோம். மேலும், அவரவர்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்துவிட்டு Resort - ன் பின்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது என்று எங்களை அழைத்து சென்றனர். சூடான பஜ்ஜியுடன் Welcome Drink - கான டீ கொடுத்தனர். பவானி ஆறு மற்றும் Resort ஐ கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தவுடன் சற்று இளைப்பாறினோம்.

அதன் பின்னர், நண்பர்கள் சில நேரம் கூடி அமர்ந்து குழு விளையாட்டுகள் விளையாடினோம். பாட்டுக்கள், நடனம், மிமிக்ரி, கேரம் போர்டு விளையாட்டு என சில நேரம் கடந்தது.

சில்லென்ற சீதோஷண பகுதிகளில் இரவில் எப்போதும் Bon-Fire என்றும் Camp-Fire என்றும் அழைக்கப்படும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டோம். மேலும், அதே Bon-Fire - ல் பார்பெக்யூ எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து எங்களுக்காக அரம்பமானது.  சைவ - அசைவ உணவுகள் அவரவர்கள் விருப்பதிற்கேற்றவாறு பரிமாறப்பட்டது.

இரவு உணவை செரிக்க செய்ய சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வந்து மீண்டும் கேரம் போர்டில் சில ஆட்டங்களை முடித்துவிட்டு களைப்பாக இருக்கவே உறங்க சென்றோம். நண்பர்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பேசியும், கேரம் போர்டு விளையாடியும் பொழுது போக்கினர்.

நேரம் செல்ல செல்ல குளிர ஆரம்பிக்கவே போர்வையை இழுத்துப் போர்த்தியவாறே தூங்கிக்கொண்டிருந்தோம். இடையில் நண்பர்கள், சில காட்டு விலங்குகளை பார்த்தோம் என்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தனர். (தூக்கத்தில் கேட்டது..). சுமார் நான்கு மணியளவில் காட்டு நாய்கள் நடமாட்டம் இருக்கிறதென்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் நண்பர் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டிருந்தார். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வந்த பயணக் களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தோம்.

Read More

Saturday, 28 May 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 1

நண்பர் சரவணகுமாரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் திட்டமிடப்பட்டது. வரவேற்பு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, இன்னும் ஒரு நாள் சேர்த்து ஊர் சுற்றலாம் என முடிவு செய்து ஊட்டி, கேரளா என ஏகப்பட்ட இடங்களை தெரிவு செய்து கடைசியாக கேரளா - தாவளம் - அட்டபட்டி - ல் இருக்கும் ஒரு Eco - Organic - River View Resort என்று முடிவெடுக்கப் பட்டது.

சரவணகுமாரின் திருமண வரவேற்பு என்பதால் (!!!) தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாக முடிவு செய்யப்பட்டு பயண திட்டம் வகுக்கப்பட்டது.

நாள் 0 (மாலை): சென்னை - கோவை பயணம்
நாள் 1: சரவணகுமார் வரவேற்பு - தாவளம் பயணம் - தங்கல்
நாள் 2: தாவளம் ஊர் சுற்றல் - சென்னை பயணம்

பயணத்திற்கான பேருந்து பர்வீன் நிறுவத்திலும், தங்குமிடத்திற்கான முன்னேற்பாடுகளையும், பயண நாளுக்கான இரவு உணவும் ஏற்பாடு  செய்தாகிவிட்டது.

நாள் 0 மாலை 6 மணிக்கெல்லாம், அலுவலகம் முன்னாள் நண்பர்களின் வருகை களை  கட்டியது. இரவு சுமார் 7:45 மணிக்கு பயணத்தை தொடங்கினோம். வழியில் Chromepet, Guduvancherry என நண்பர்களை பேருந்தில் ஏற்றியாயிற்று. இரவு உணவை நெடுஞ்சாலை மொடேல் அருகில் நிறுத்தி முடித்தாயிற்று. இடையில் சேலம் புறவழி சாலையில் தேநீர் மற்றும் இயற்கை கடன்கள் நிறைவேற்றம்.

காலை மணி 7 க்கு கோவை - சூலூர் வந்தடைந்தோம். சூலூரில் நண்பர் ஹோட்டல் அறைகளை எங்களுக்காக ஒதுக்கியிருந்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு நாங்கள் எங்களை தயார் செய்து கொண்டு காலை உணவுக்கு தயாரானோம். திருமண வரவேற்புக்கு செல்கிறோம் என்பதால் அனைவரும் வேஷ்டி - சட்டை அணிந்திருந்தோம்.

திருமண வரவேற்பு கோவை - ஈச்சனாரி ஹேமாம்பிகை மண்டபத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் முதலில் ஒரு குழுவாக மண  மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் ஒரு கேக் ஆர்டர் செய்து அதை மேடையிலேயே மணமக்களை வெட்ட வைத்தோம்.

மதிய உணவை முடித்துக் கொண்டு சுமார் 2 மணிக்கெல்லாம் அடுத்த இலக்கான தாவளம் நோக்கி புறப்பட தயாரானோம். பேருந்தில் ஏறும் போதே பின் டயர் பஞ்சர் என்றும் அதனை சரி செய்த பிறகே தாவளம் நோக்கி பயணப் படலாம் என்றனர், கோவை வடவள்ளி அருகே பேருந்து பின் (பின்) சக்கரத்தை கழற்றி, மாட்டி சரி செய்தாயிற்று. நண்பர்கள் அனைவரும் இந்த டயர் கழற்றி-மாட்டும் வேலைகளில் பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு உதவி செய்தனர். 4 மணியளவில் தாவளம் நோக்கி பயணமானோம்.





Read More

Sunday, 2 August 2015

குற்றாலம் - கன்னியாகுமரி - II

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 2:

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 1

முதல் நாள் குற்றாலம் பயணத்தை முடித்துக்கொண்டு,

முன் அதிகாலை 01:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். இருவர் ஓர் அறையில் தங்குமாறு அறைகள் ஒதுக்கியிருந்தனர். பயணக் களைப்பில் உடனே உறக்கம்.

கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி விவேகானந்தா கேந்திரா சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித் தனி கட்டிடங்களில் பல  வகையான அறைகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைத்துள்ளனர். மேலும் அறைகள் 2 தனித் தனிக் கட்டில்கள், மெத்தைகள், குளியலறை என மிக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது.

சூரிய உதயம்:

அதிகாலை 04:30 மணிக்கு எழுந்து சூரிய உதயத்தை காண ஆயத்தமானோம். 05:00 மணிக்கு உணவகம் திறக்கப்பட்டுவிடுகிறது. குளித்து முடித்த கையேடு தேநீர் அருந்திவிட்டு விவேகானந்தபுரம் பகுதியில் சூரிய உதயத்தைக் காண அமைந்துள்ள ஒரு View Point நோக்கி நடக்க துவங்கினோம். கேந்திர வளாகத்தை மிகவும் அருமையாக பராமரிக்கின்றனர்.

View Point - ன் வலது புறத்தில் கடலில் ஒரு 100 M அளவுக்கு கருங்கற்கள் கொட்டி அழகாக சூரிய உதயத்தை காண ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாகவே சென்ற காரணத்தால் காத்திருந்து.. காத்திருந்து அழகாக, ரம்மியமாக சூரிய உதயத்தை காண முடிந்தது. Photo Session முடித்துவிட்டு மீண்டும் அவரவர் அறைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பிறகு அனைவரும் அவரவர் அறைகளை காலி செய்து விட்டு மீண்டும் விவேகானந்தா  கேந்திராவின் உணவகத்திலேயே மிக அருமையான சுவையான காலை  சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.  மேலும், விவேகானந்தா பாறைக்கு செல்ல தயாரானோம்.

விவேகானந்தர் மண்டபம்:

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 'பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்' விவேகானந்தர் மண்டபத்திற்கும், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து அளித்து வருகிறது. டிக்கெட் முன் பதிவு செய்ய காலை 09:00 மணிக்கே அத்தனை கூட்டம். தாழ்வான அலைகளின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கான படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  நாங்கள் அனைவரும் வரிசையில் நின்று விவேகானந்தர் பாறைக்கான டிக்கெட்டுகளை எடுத்துகொண்டு படகின் வருகைகாக காத்திருந்தோம்.

ஒரு 5 நிமிட பயணத்தில் விவேகானந்தர் பாறையை அடைந்தோம். மேலும் மண்டபத்திற்குள்ளே செல்ல தனி கட்டணம் வசூலிக்கின்றனர். கடலின் நடுவே அந்த மண்டபம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்ததன் நினைவாக இந்த மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான விவேகானந்தர் சிலை மட்டுமல்லாது, ராமகிருஷ்ணர் மற்றும் சாரதா தேவியின் சிலைக்கும் அமையப்பெற்றுள்ளது அந்த மண்டபம். விவேகானந்தரின் நினைவாக ஒரு தியான மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

திசை காட்டி, சூரிய நாட்காட்டி, புத்தக மற்றும் இதர  புகைப்பட விற்பனை நிலையங்களும் உள்ளன. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறை மற்றும் சிலையை பார்த்து பிரமிக்கத்தான் வேண்டும். மீண்டும் படகின் மூலமாக கன்னியாகுமரி கடற்கரையை அடைந்தோம். தேவி பகவதி அம்மனை வழயில் தரிசித்து விட்டு சுசீந்திரம் நோக்கிப் பயணமானோம்.

சுசீந்திரம்:

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள தாணுமாலயன் கோயிலை தரிசனம் செய்தோம். இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்களும், இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபமும் உள்ளன. மேலும், இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன. மிகப் பெரிய தெப்பக் குளத்தை கடந்து நாங்கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கிப் பயணமானோம்.

பத்மநாபபுரம்:

பத்மநாபபுரம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது . இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது.

இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

  • மந்திர சாலை
  • தாய்க் கொட்டாரம்
  • நாடக சாலை
  • நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
  • தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)
  • அன்னதான மண்டபம் 
  • சரஸ்வதி கோவில் 
  • நவராத்திரி மண்டபம் 

பத்மநாபபுரம் அரண்மனையின் வெளியே கைவினைப்  கடைகள் ஏகமாக இருந்தது. மேலும், மதிய உணவை கேரள வகை அரிசியில் அரண்மனையின் வெளியே உள்ள கடையிலேயே  முடித்துக்கொண்டோம்.  இப்போது நாகர்கோயிலுக்கு பயணம்.

பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கி பீடியாவை சொடுக்கவும்.

நாகர்கோவில்:

பத்மநாபபுரம் அரண்மனையை முடித்துகொண்டு, 2 நாள் பயணத்தினை நிறைவு செய்ய சென்னைக்கு அனந்தபுரி விரைவு வண்டியில் பயணிப்பதாக திட்டம். மாலை 06:50 மணிக்கு நாகர்கோவில் நிலையத்திலிருந்து வண்டி. நாங்கள் 04:00 மணிக்கே  வந்துவிட்டபடியால்  (திற்பரப்பு அருவியும், மாத்தூர் தொட்டிப் பாலம் ஆகியவைகளை நேரம் கருதி பார்க்க இயலாமல் போனதனால்) நாகர்கோவிலின்  பெயருக்கு காரணமான நாகராஜர் கோவிலுக்கு ஆட்டோ - வில் சென்றுவிட்டு, இரவு உணவுக்கான பார்சல்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயில் நிலையம்  திரும்பினோம்.

அனந்தபுரி ரயில் மெல்ல நாகர்கோவில் நிலையத்தை விட்டு விலகியபோதும், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு திரும்பும்போதும் மனது 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தது.
Read More

குற்றாலம் - கன்னியாகுமரி - I

இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருந்து குற்றாலம் - கன்னியாகுமரி சுற்றுலா. Official (அ) Un-Official என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய பணிக் காலத்தில். கடந்த 8 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. 

கிட்டத்தட்ட 30-40 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து போக வர டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு, பயண திட்டமும்  தயார் நிலையில் இருந்தது. அனைவரும் அந்த நாளுக்காக வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது.  

நாள் 1:

7 மணி ரயிலுக்கு 5 மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்பியாகிவிட்டது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து சிறப்பு ரயிலான நாகர்கோவில் விரைவு வண்டியில் சாத்தூர் செல்கின்றோம். அனைவருக்கும் ஒரே பெட்டியில் இடம் கிடைத்தது ஏக மகிழ்ச்சி. வழக்கமான கூத்து மற்றும் கும்மாளங்களுடன் பயணம் இனிதே தொடங்கியது .

நாள் 2:

அதிகாலை மணி 04-30 மணிக்கு சாத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கியாகிவிட்டது. எவருடைய முகத்திலும் அந்த நேரத்தில் பயண களைப்பே தெரியவில்லை. சாத்தூர் ரயில் நிலையத்தின் வெளியே எங்களுக்காக ஒரு Mini - Bus காத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முழுக்க இந்த Mini - Bus - ல் தான் பயணம்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, திருவேங்கடம் எனும் ஊரில் காலை 06:00 மணிக்கே சூடாக வடை, போண்டா மற்றும் Tea என காலை (சிறு) சிற்றுண்டியை முடித்துக்கொண்டு குற்றாலம் நோக்கி பயணம்.

காலை 08:00 மணியளவில் குற்றாலத்தை அடைந்து, அருவிகளில் குளிக்க ஆயத்தமானோம். வெயில் அற்ற குளுமையான சீதோஷ்ண நிலை மனதை இலகுவாக்கியது. காலை உணவுகளை அருகிலிருந்த கடைகளில் முடித்துக்கொண்டோம்,

முதலில் மெயினருவி: அன்றைய நாளில் முதல் அருவியாதலால் ஆர்வம் மிகுதியோடு மெயினருவி சென்றடைந்தோம் கையில் துண்டு மற்றும் மாற்று துணிகளோடு. மிக நீண்ட, காவலர்களால் வழிநடத்தப்படும் வரிசையில் அனைவரும் காத்திருந்தனர் ,நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். உடன் கொண்டு வந்த  துணி மணிகளை மூட்டையாக கட்டி பாதுகாப்பு அறைக்குள் வைத்தாயிற்று. இனி குளியல்தான்.

அருவியில் மிக வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சராசரியாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. தண்ணீர் மேலே பட்டவுடன் ஏற்ப்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது. சிறு குழந்தையைப் போல் மாறி 'ஓ ஓ ஊ' என்று கத்திக் கொண்டே அருவியில் குளித்தது மறக்க முடியாதது. (கத்தியதால் காவலரிடம் திட்டு வாங்கியது வேறு விஷயம்!?!?)

மெயினருவியிலிருந்து வெளியே வந்தவுடன் 'தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம்' சார்பாக மீன் வறுவல் கடை இருந்தது (அப்புறம் எப்படி மீன் வளர்ச்சி அடையும்?). அங்கு நண்பர்கள் மீன் வறுவலை அமுக்கிக் கொண்டிருந்தனர். வேறு சில நண்பர்களோடு நுங்கு மற்றும் பதநீரை, நுங்கு மாற ஓலைகளில் சாப்பிட்டோம். இப்போது பழைய குற்றால அருவியை நோக்கி பயணம் (7 KM)

பழைய குற்றாலம்: வண்டியில் இருந்து இறங்கியவுடன்  1 KM தூர மலைப் பாதையில் நடந்த பிறகு பிரம்மாண்டமாக இருந்தது பழைய குற்றாலம். மிக நீண்ட மலைப் பாறை, அதன் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. மெயினருவியில் இருந்தது போல் காவலர்களின் தலையீடு  அல்லாமல் ஒரே தள்ளு முள்ளுவாக இருந்ததனால் சரியாக குளிக்க முடியாமல் போனது வருத்தமே.. இருந்தாலும் நண்பர்கள் மகிழ்ச்சியுடனேயே குளித்தனர்.

மீண்டும் வரும் வழியில், மாங்காய் துண்டுகள், பலா துண்டுகள் என வாய்க்கும் வேலை கொடுத்துக் கொண்டே பேருந்தை அடைந்தோம். மற்ற நண்பர்கள் வரும் வரை பேருந்தின் மேலே ஏறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு சாகச வேலைகள் செய்து கொண்டிருந்தோம். இப்போது புலியருவியை நோக்கிய பயணம்.

புலியருவி: மீண்டும் குற்றாலம் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலிருந்து ஒரு 600 மீ நடை பயணம். பெயருக்கேற்றாற்போல் அருவியில் தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டிருந்தது. வழக்கம் போல சிறு குழந்தையாய் மாறி அருவிகளின் வேகத்திற்கு ஏற்ப குளித்தோம். சற்று கீழேயே அதே போல தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அங்கேயும் குளித்தோம்.

மதிய உணவுக்காக, தங்கியிருந்த அறைக்கு வந்து துணி மணிகளை மாற்றிக்கொண்டு ஒரு சைவ உணவு கடைக்காக நடந்தோம் . 1.5KM கடந்து Hotel Archana வில் உணவருந்திவிட்டு மீண்டும் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இடைவேளியே அல்லாமல் ஐந்தருவியை நோக்கி புறப்பட்டோம்.

ஐந்தருவி: மலையிலிருந்து அருவி 5 பாகமாக சமசீர் இடைவெளியிட்டு கொட்டுகிறது (ஆம், மிக வேகமாக !!). 2 அருவிகளில் பெண்களுக்கும், 3 அருவிகளில் ஆண்களுக்கும் குளிக்க அனுமதித்திருந்தனர்.

மற்ற மூன்று அருவிகளில் குளித்தது போல் அல்லாமல் மிக வித்தியாசமான அனுபவம். தண்ணீர் துளிகள் முதுகில் படும் பொது எதி ஊசி வைத்து குத்துவதைப் போலவே உணர்ந்தும் அதே போல் தலையிலும், உடலிலும் அந்த வேகமான தண்ணீர் விழும் பொது ஒரு பெரிய கல் மேலே விழுவதை போலவே உணர்ந்தோம்.

அருவிகளை விட்டு வெளியே வர மனமில்லாமல் அங்கேயே மாலை தேனீர் அருந்திவிட்டு மீண்டும் பேருந்தை அடைந்தோம். தங்குமறை நோக்கி பயணப் பட்டோம். வழியில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி  கழகத்தின் சார்பில் படகு குழாமில் படகு சவாரி.

படகு சவாரி: 4 பேர் ஒரு படகு என்று 6 மிதி படகுகளில் படகு சவாரி. ஆனந்தமாகும், அருமையாகவும் இருந்தது. அனைத்து படகுகளையும் ஒருசேர கொண்டு வந்து ஆர்ப்பரித்த அந்த தருணம் மறக்க முடியாதது.

தாங்கும் அறை வந்தடைந்து, துணி மணிகளை மாற்றிக் கொண்டு குற்றாலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல திட்டம்.

வழியில் கேரளா - தமிழ் நாடு எல்லைப் பகுதியில் 'ரஹமத் பார்டர் கடை' யில் இரவு உணவருந்திவிட்டு கன்னியாகுமரி நோக்கி விரைந்தோம்.

இரவு 1:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். 


Read More

Thursday, 30 July 2015

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - அஞ்சலி



ஏழ்மையில் பிறந்து, எழுச்சி அடைந்து,
எளிமையை விரும்பி,
எண்ணியவையை சாதித்த,
எதார்த்த உள்ளமே!!

எத்தனை எழுச்சி உரைகள்,
அத்தனையும் புதிய முயற்சிக்கான
வரைமுறைகள்!!

எத்தனை அறிவியல் ஆராய்ச்சிகள்,
அத்தனையும் நாட்டின் வளர்ச்சிக்கான படிகள்!!

எத்தனை விருதுகள் கையில்,
அத்தனையும் தலையில் ஏற்றாத
உழைப்பின் உருவ வடிவங்கள்!!

ஓய்வுகாலத்திலும் ஓயாமல் ஒருமனதாய்
மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக,
மக்களுக்காக பணியாற்றிய
பெருமைக்குரிய பேராசிரியரே!!!

உங்கள் இழப்பு எக்காலத்திலும் ஈடு மட்டுமல்ல
சமன் செய்யக் கூட இயலாது!!!

நன்றி: த. ராஜ் குமார் (RCS) 
Read More

Friday, 2 January 2015

2014 ஆண்டு அனுபவங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் - 2015

01-Jan-2014 முதல் 30-Dec-2014 வரை


Diary, Flashback, ஆண்டறிக்கை, Annual Report எழுதுகின்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை (தன்னடக்கமே :-) ). இருந்தாலும் சென்ற 2014 ஆம் ஆண்டு இனிதே பல நல்ல விதைகளை தூவிச் சென்றுள்ளது. 

2014 தொடக்கம் முதலே வெகு நேர்த்தியாக அமைந்தது. வேலை நிமித்தமாக பெங்களூர், மும்பை என பயணம் அதிகம் செய்த ஆண்டாகவும், பதவி உயர்வு கொடுத்து மேலும் பணிச்சுமை (சுகமான) அதிகரித்த ஆண்டாகவும், வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வான திருமணம் நடந்தேறிய ஆண்டாகவும் அமைந்தது.

இந்த விதைகள் அனைத்தும் விருட்சங்களாக இந்த 2015 ஆண்டு கை கொடுக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்கின்றேன்.

31-Dec-2014

சன் டிவி கவுண்ட் டவுன், சகல கல வல்லவன் திரைப்பட "Happy New Year" பாடல், பழைய நண்பர்களுடன் உரையாடல் மற்றும் வாழ்த்துக்கள் பரிமாற்றம் என்று களை கட்டியது 2015 ஆம் ஆண்டு புத்தாண்டு துவக்கம். மீண்டும் வழக்கமாக ஷாலோம் மேன்ஷன் - ல் இருந்தே துவங்கியது.

01-Jan-2015

உற்சாகமான புத்தாண்டு தினம். மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயம் தொடங்கி, தி. நகர் வெங்கட்நாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானம் பெருமாள் தரிசனம்.

சுமார் இரண்டு  மீட்டர் நீளத்திற்கு வரிசை. புத்தாண்டு அன்று மட்டும் மக்களுக்கு எங்கிருந்து தான் இந்த பக்தி, ஆன்மீக உணர்வு வருகிறதோ என்றே நினைக்க தொன்றுகிறது.  சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திவ்ய தரிசனம். மனசெல்லாம் மகிழ்ச்சி. பல வகையான மனிதர்களை இந்த இரண்டு மணி நேரத்தில் சந்திக்க முடிந்தது.

மேலும், மாலையில் நண்பர்கள் முருகானந்தம், மணி மற்றும் சரவணா ஆகியோருடன் பெசன்ட் நகர் கடற்கரையில் உற்சாகமான உரையாடல்கள், நல்ல சுத்தமான காற்று மற்றும் கடற்கரையோர உலாவல். 

புத்தாண்டு தின கொண்டாட்டங்களை நிறைவு செய்யும் விதமாக அடையாறு "The Store" என்ற பெயரிலான உணவகத்தில் இரவு உணவு. வகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட  இந்த உணவகத்தின் Tag Line மிகவும் பிடித்திருந்தது. 

Come 
Play 
Eat 

ஆம். உள்ளரங்கில் விளையாடக் கூடிய Snookers, Games Console மற்றும் பல விளையாட்டுக்கள் இந்த உணவத்தின் உள்ளேயே உள்ளன. உணவு Order செய்துவிட்டு வரும் வரை விளையாடிவிட்டு உணவருந்தலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.

அனைவருக்கும் 2015 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
Read More

Thursday, 1 January 2015

Happy New Year and Book Fair 2015

Wish you all a very Happy and Prosperous New Year 2015..

As usual, January brings us with loads of festivals like New Year, Pongal, Sangeetha Season, Republic Day, Mylapore Festival and none other than Chennai Book Fair.

And here comes the details of 38th Chennai Book Fair @ Chennai.


Read More

Wednesday, 12 November 2014

சிஸ்துபலேக்கா

பயணங்கள் என்றுமே சலிப்பு தட்டாதவை. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய விஷயங்கள் என எல்லாமே புதியதாக அமைவதனால் என்னவோ!! அவ்வாறான இனிமையான பயணங்களில் மழலைகளுடன் உரையாடுவது அலாதியான ஒன்று. 

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக இருந்ததனால் ஒரு 5 வயது சிறுமியை இருக்கையில்  அமர்ந்திருந்த என்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டு   பெற்றோர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். முதல் கேள்வியாக எப்போதும் போல் "உன்னுடைய பேர் என்ன?" என தொடங்கினேன். சற்றே தயக்கத்திற்குப் பிறகு "சிஸ்துபலேக்கா" என்று பதில் வந்தது. ஒன்றும் விளங்கவில்லை அந்த பதிலில். மீண்டும் அதே கேள்வியை கேட்க, பதிலிலும் எந்த மாறுதலும் இல்லை. நமக்கு மறுபடியும் புரியாமலே இருந்தது. 

புரிந்துகொண்டதுபோல் சமாளித்துக் கொண்டு  "எந்த வகுப்பில் படிக்கிறாய்?" என அடுத்த கேள்வியை கேட்க, முதலாம் வகுப்பு என்று முதல்முறையாக சரியான பதில் சொன்னாள். இருந்தாலும் மனதினில் அந்த பெயர் புரியாத நிலை வேறு குத்திக் கொண்டிருந்தது. மனதிற்குள் பலவேறு வகையான கேள்விகள் அந்த பெயரை கண்டு பிடிப்பதற்கு...

சிறுமியின் நெற்றியை பார்த்தேன், Christian ஆக இருப்பர்களோ என்று. ம்ஹூம், இல்லை. நெற்றியில் பட்டையாக விபூதி. கோவிலில் இருந்து நேரடியாக வந்ததுபோல். முகம்மது கஜினியைப் போல் மீண்டும் முயற்சிக்க இம்முறையும் அதே "சிஸ்துபலேக்கா" என்ற பதில் தான். மனதுக்குள் ஒரு பெயரைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்ற இயலாமை வேறு. இருந்தாலும் மழலை மொழி அவ்வளவு எளிதல்ல புரிந்துகொள்ள. எப்படியிருந்தாலும் சிறுமியை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் போது பெயர் பெயர் கேட்டுவிட வேண்டும் என்றும் மனம் எண்ணியது. 

மீண்டும் அதே கேள்வி மற்றும் அதே பதில். இம்முறை 2ஆவது கேள்வி வித்தியாசமாக "உங்க வீட்டில் உன்னை எப்படி கூப்பிடுவாங்க?" என்று. "துபலேக்கா" என்று பதில் வந்தது . சுதாரித்துக் கொண்டு "சுபலேகா" வா என்றேன். ஆமாம் என்று பெரியதாய் தலையாட்டினாள் அவள். அப்பாடா... பேரு மூச்சு, அவளது பெயர் "ஸ்ரீ சுபலேகா". அறிவியல் விஞ்ஞானிகள் யுரேக்கா என்று கர்ஜிப்பது போல் தோன்றியது மனம். 

இந்த பெயர் கண்டு பிடிப்புக்கு இடையே பல விஷயங்கள் மனதுக்குள் ஓடின.

  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் Daddy, Mummy என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்.
  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ABCD ஒழுங்காக சொல்கிறார்களா என்றே எண்ணுகின்றனர்.
  • தமிழ் படிப்பது/ பேசுவது தவறு என்றே எண்ணுகின்றனர்.


அவர்கள் தத்தம் பெயர்களை ஒழுங்காக உச்சரிக்க வேண்டும். பிறர் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் அதற்கான பயிற்சியில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளத்தில் படித்த செய்தியை மேற்கூறிய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றியது.

பெங்களூரில் ஒரு பள்ளிச் சிறுமியை ஒருவன் கடத்த முயல்கிறான், அந்த சிறுமியிடம் அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து வர சொன்னதாக சொல்ல, அவனிடம் Password என்ன என்று கேட்டிருக்கிறாள் அவள். திருடன் முழிக்க ஆரம்பித்திருக்கிறான். புத்திசாலியான சிறுமி மற்றும் அவளது தாயார்  அந்த நேரத்தில் சமயோசிதமாக எவ்வாறு நடந்துகொள்வது என்று பயிற்சி கொடுத்திருக்கிறார். பாராட்டப்படவேண்டிய ஒன்று.

தமிழ் படிப்போம்/ பேசுவோம்/ கற்றுக்கொடுப்போம்/ உச்சரிப்போம் தெளிவாக.
Read More

Tuesday, 11 November 2014

இடைவெளி....... திருமணம்...... தொடக்கம்

இடைவெளி
.
.
.
.
.
ஜனவரி மாதத்திற்கு பிறகு பணிச்சுமை மற்றும் பலவேறு காரணங்களினால் தள்ளிப் போன வலை பதிவினை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி.
.
.
.
.
.
திருமணம் 
.
.
.
.
.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஆசியுடன்
2014 செப்டம்பர் மாதம் திருமணம் இனிதே நடைபெற்றது.
.
.
.
.
.
தொடக்கம்
.
.
.
மீண்டும் இந்த வலைப் பூவின் மூலம் கருத்துக்களை பகிர விழைகிறேன்.
Read More

Tuesday, 28 January 2014

புத்தக காட்சி - 2014

சென்னை புத்தக காட்சி - 2014, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.
சென்ற ஆண்டு முழுவதும், என்னுடைய வாசிப்பிற்கான ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தக மதிப்புரைகளைப் பட்டியலிட்டு வந்துள்ளேன்.

அந்த பட்டியலுக்கு செயல் வடிவம் கொடுக்க YMCA மைதானத்தில் நடந்த சென்னை புத்தக காட்சி - 2014 க்கு சென்று வந்தேன்.

இம்முறை வாகன நிறுத்தும் இடத்திலிருந்து புத்தக காட்சி நடக்கும் YMCA கல்லூரி மெயின் கேட் வரை வேன் - ல் அழைத்துச் சென்றார்கள். 770 ஸ்டால்கள் கொண்ட பிரம்மாண்டமான இடம். வழக்கம் போல தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயரில் நடை பாதைகள். குறுகலாக இல்லாமல் விஸ்தாரமாக தெரிந்தது.

வழக்கம் போல இம்முறையும் குழந்தைகளுக்கான CD, DVD ஸ்டால்கள், ஜூஸ் கடைகள் மற்றும் வித்தியாசமாக நித்தியானந்தர் மற்றும் சில சாமியார்களின் அரங்ககுகளும் இடம் பெற்றிருந்தன.

மனுஷ்ய புத்திரன், ஞாநி, சாரு நிவேதிதா, அராத்து மற்றும் சில சின்ன/பெரிய திரை நடிகர்களையும் மற்றும் பல வலைப் பூ எழுத்தாளர்களையும் சந்திக்க முடிந்தது.

வாங்கிய புத்தகங்கள்:

பெயர் - ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில்.

1. சின்ன வயதினிலே - மெரினா - விகடன்
2. ஆறாவடு - சயந்தன் - தமிழினி
3. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாக்ஷி
4. பெர்லின் இரவுகள் - கோ. கருணாமூர்த்தி - உயிர்மை
5. அன்சைஸ் - பா. ராகவன் - மதி நிலையம்
6. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ண நிலவன் - நர்மதா
7. அடுத்த கட்டம் - என். சொக்கன் - மதி நிலையம்
8. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் - காலச்சுவடு
9. ஆதி மங்கலத்து விசேஷங்கள் - சு. கி. சிவகுமார் - விகடன்
10. எரியும் பனிக் காடு - இரா. முருகவேல் - விடியல்
11. ஒரு இந்திய கிராமத்தின் கதை - சரவணன் - சந்தியா
12. அடுத்த வீடு 50 மைல் - தி. ஜானகிராமன் - ஐந்திணை
13. எஸ்கேப் - சுரேகா - மதி நிலையம்
14. வட்டியும் முதலும் - ராஜு முருகன் - விகடன்
15. நம். 40 ரெட்டை தெரு - இரா. முருகன் - கிழக்கு
16. லிண்ட்சே லோகன் W/O  மாரியப்பன் - வா. மணிகண்டன் - யாவரும்.காம் 
17. ராஜீவ் காந்தி சாலை - விநாயக முருகன் - உயிர்மை
18. ஆஸ்டின் இல்லம் - சுஜாதா - கிழக்கு
19. ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - எஸ். ராமக்ருஷ்ணன்
20. மங்கள இசை மன்னர்கள் - மணியன் - மணிவாசகர்
Read More

Thursday, 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!


அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார்.

அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர சுத்தமாக தமிழில் உரையாடினார். 

சீன மொழி மட்டுமல்லாது, வேற்று நாட்டு மொழி ஒன்றை படிக்க ஆர்வப்பட்டு, இந்திய மொழிகளில் தமிழை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தமிழ் கலாசாரம், கோவில்கள்  மற்றும் பண்பாடு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், 2013 ஆண்டை  ஈராயிரத்து பதிமூன்று என்று உச்சரித்தது மிகவும் ஆச்சரியம். 

இந்தியாவில் முதலில் பார்த்த நகரம் சென்னை என்றும் தமிழ் உணவுகளில் இட்லி, மசாலா தோசை ஆகியவை பிடித்திருக்கிறதாகவும் கூறினார்.

மேலும், சீனாவில் இன்ப உலா என்ற சீன பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், சீன - தமிழ் அகராதி தயார் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழர்களாக இருந்தும், அவர்களால் சாதாரண தமிழில் கேள்விகளை கேட்க முடியவில்லை. சாதாரணமாக உரையாடினால் எங்கு ஆங்கிலம் கலந்து விடுமோ என்ற அச்சத்தால் செந்தமிழில் தான் பேசினர். மேலும், கலைமகள் திருக்குறள் (நன்றி மறப்பது நன்றன்று... என்ற), தமிழ் பாடல் பாடியதும் மிகுந்த ஆச்சர்யமே.

அந்த காணொளிக்கான சுட்டி: http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME 



Read More

Thursday, 2 January 2014

2014 - புத்தாண்டு கொண்டாட்டங்கள்


Happy New Year - 2014

புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.

01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100, Rs. 50 மற்றும் தர்ம தரிசனம் என வகைபடுத்தியும் மிக அதிகமான கூட்டம். Q வில் நின்றால் 3 மணி நேரமாவது ஆகும் எனப் பட்டதால், வடபழனி ஆண்டவரை கோபுர தரிசனம் செய்து விட்டு நடையை கட்டினேன்.

நேரே மாயாஜால் பயணம். (அது என்ன மாயமோ தெரியவில்லை, ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மாயாஜாலில் மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது!!!). கிழக்கு கடற்கரை சாலையில் போகிற வழி எங்கும் புகழ் பெற்ற கோவில்கள் (சாய் பாபா, ISKCON, பூரி ஜெகந்நாதர் etc.), உணவகங்கள் அதிகம் இருப்பதாலும் விடுமுறை தினத்தன்று இந்த சாலை அதிகபட்ச மக்களால் பயன் படுத்தப்படுவதால் எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல். 

நண்பர்களுடன் மாயாஜாலில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த "என்றென்றும் புன்னகை" திரைப்படம் பார்த்தேன். (மேற்கூறிய காரணத்தால் அரை மணி நேரம்  தாமதமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்). ஒரு வித்தியாசமான கதைக்களம். திருமணமே செய்ய மறுக்கும் இளைஞர்கள், சூழ்நிலைகளினால் மாறி திருமணம் செய்து கொள்ளும் கதை.

திரைப்படம் முடிந்தபின், சோழிங்க நல்லூரில் இல்ல ISKCON கோவில் சென்று ராதா கிருஷ்ணரை வழிபட்டோம். கோவிலின் அமைப்பு  மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.  ISKCON கோவில் கட்டுமானம் பிற ISKCON கோவிலைப் போலவே இருக்கின்றது. முன்பொருமுறை பெங்களூரு ISKCON கோவில் சென்று வந்திருக்கிறேன்.

மாலை மீண்டும், ECR ல் பயணித்து வேட்டுவான்கேணி பகுதியில் உள்ள "BASERA" என்ற சிறப்புக் கூறு உணவகத்தில் உணவருந்தினோம். BASERA உணவகம் ஒரு Garden Theme ல் உருவாக்கப்பட்டுள்ளது. இருட்டான அந்த Garden அமைப்பில், மேஜையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தான். (ஆங்கிலத்தில், Candle Light Dinner என்கிறார்கள்).

மொத்தத்தில், வழக்கம் போல ஒரு புத்தாண்டு தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிய நிறைவுடன் கலைந்தோம்.
Read More

Saturday, 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)

இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம். 

திருப்பதி RTC பேருந்து நிலையத்தில் திருமலைக்கு செல்லும் அரசுப் பேருந்திற்கு மாற்றலாகி திருமலைக்கு புறப்பட்டோம். ஒவ்வொரு முறை திருமலைக்கு பயணப்படும் போதும் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றத்தை காண முடியும். இம்முறை திருமலைக்கு சென்ற அரசுப் பேருந்தில்  "ஓம் நமோ வேங்கடேசாய.." மந்திரம் ஒலித்துக்குக் கொண்டே இருந்தது. இந்த மந்திர உச்சரிப்பு நம்மை திருமலைக்கு செல்லும் வழியெங்கும் மனதை  ஆன்மீகத்தில் ஒருங்கிணைப்படுத்தியது. மேலும், மலைச் சாலை தொடங்கியதுமே ஒவ்வொருவரும் சோதனைக்குட்படுத்தியபிறகே பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை ராம் பக்கீஜா பேருந்து  நிலையத்தில் இறக்கி விடப்பட்டோம். தலை மொட்டை அடித்துக் கொள்ள சென்றவர்கள் திரும்பும் வரை அங்கேயே காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு கை பேசி, செருப்புகள் மற்றும் நம்மிடம் உள்ள அனைத்து வகையான மின்னணு சாதனங்களை அங்கு ஒரு கடையில் டோக்கன் போட்டு வைத்து விட்டோம். இனி தரிசனம் முடிந்த பிறகுதான் இதனை திரும்ப எடுக்க முடியும்.

திருமலையில் எதாவது ஒரு கட்டிட, சாலை மற்றும் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. கோவிலின் முன்புறம் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கு முன்  திருமலை வந்த பொது கோவிலின் முன்னே சூடம் ஏற்றும் இடத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை இருபுறமும் கடைகள் இருக்கும். இம்முறை ஆஞ்சநேயர் கோவில் வரை தரை தான். மிகவும் விஸ்தாரமாக காட்சி அளிக்கின்றது.

கோவிலுக்கு இடது புறம் உள்ள வைகுண்டம் Q காம்ப்ளெக்ஸ் க்கு சென்று சுற்றுலா அதிகாரி Rs. 300/- அனுமதி சீட்டு வாங்கி வரும் வரை காத்திருந்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சரியாக மணி 12 அளவில் Q காம்ப்ளெக்ஸ் ன் உள்ளே அனுமதிக்கப் பட்டோம். வழக்கம் போல அறைகளில் மக்கள் கூட்டம். நாங்கள் 25 ஆம் எண் அறையிலிருந்து வெளியேறி Q காம்ப்ளெக்ஸ் முழுவதும் நடந்து (ஊர்ந்து!) சென்று மீண்டும் கோவிலின் இடது புற வழியாக திரும்பி முன்புறமான மஹா  துவாரம் என்றழைக்கப்படும் பிரதான வாயிலில் நுழைந்தோம்.

கோவிலினுள் அனைத்து மண்டபங்களும் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கொடிமரம் தாண்டி மீண்டும் ஒரு சிறு கோபுரம் வழியாக மூலஸ்தானம் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தோம். அதுவரை பொறுமையாக வந்த மக்கள் அதற்குப் பிறகு தள்ளு முள்ளுதான். கிட்ட தட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு ஏழுமலையானை சுமார் 1 நிமிடம் தரிசித்துவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோவிலின் உள்ளே இருந்து வெளியேறினோம்.

சுற்றுலா அதிகாரி கூறியது போல கோவிலின் எதிரே உள்ள புத்தக நிலையத்தில் அனைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அனைவரும் திரும்பிய பிறகு அவரவர் லட்டு பிரசாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் ராம் பக்கீஜா பேருந்து நிலையத்திற்கு திரும்பி உடமைகளை பெற்றுக் கொண்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.

திருப்பதி வந்தவுடன் மதிய உணவு எடுத்துக் கொள்ள திட்டம். மணி 4.45. எங்களுடைய அடுத்தப் பயணத்திட்டத்தில் திருச்சானூர் அலமேலுமங்கை கோவில். இந்த கோவிலில் மாலை 5.30 மணியிலிருந்து 07.00 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது. இந்த காரணத்தை கொண்டு மதிய உணவை புறந்தள்ளி விட்டு Rs. 100/- பெறுமான அனுமதி சீட்டு வாங்கி 05.30 மணிக்கு முன்னதாகவே தரிசனம் முடித்தாயிற்று. திருச்சானூர் கோவிலில் Rs. 100/- அனுமதி சீட்டிற்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சென்னை திரும்பும் வழியில் திருத்தணியில் எங்களுடைய மதிய(மாலை) உணவை அருந்தினோம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் ஹிந்தி  (தெரிந்த வரை!) மொழிகளில் பலரிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 

திருமலை-திருப்பதி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் திருத்தணி, திருவள்ளூர், போரூர் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


Read More

Saturday, 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2


 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள். 

சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து சேர்ந்தோம். Hotel நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகான அமைப்புடன் இருந்தது. ஒரு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துவிட்டு  அடுத்தக் கட்ட உள்ளூர் பயணத்திற்கு தயாரானோம். Hotel - அறையினில் இருந்து உதகை ரம்மியமாக காட்சி அளித்தது. வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது.


Hotel அறையிலிருந்து வெளியில் வந்தவுடன் புதிய சீதோஷன நிலை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மழை மற்றும் குளிருக்கு இதமான ஆடைகளையே அணிந்திருந்தோம் இருந்தாலும் நவம்பர் மாதக் குளிரைத் தாங்கும் வகையில் குளிருக்கேற்ற அணிகலன்களை வாங்கி அணிந்துகொண்டோம்.

இருசக்கர வாகனத்தை வாடகை அமர்த்திக் கொண்டு உள்ளூரில் உள்ள சில இடங்களை கண்டு களிக்கலாம் என்று திட்டம். அதேபோல் தலா  ஒரு Thunderbird, Pulser மற்றும் Dio வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை வாடகை வாகனங்களின் தகுதிக்கேற்ப வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவு தனி. நமது ஓட்டுனர் உரிமங்களை சரி செய்த பிறகே வாகனங்களை அளிக்கின்றனர். (ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து கொள்கின்றனர் அத்தாட்சிக்காக)

அனைவரும் அவரவர் வண்டிகளில் உதகை நகர ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தோம், ஏரியில் படகுச் சவாரி செய்வதற்காக. மழை மீண்டும் குறுக்கிடவே ஏற்கனவே குளிரில் இருந்த நாங்கள் ஓரமாக நின்று மழை முழுவதுமாக நிற்கும் வரை காத்திருந்தோம். பனி மூடிய அந்த மாலைப் பொழுது மிகவும் இதமாக இருந்தது. மழை நின்ற பிறகு முதலில் மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் ஒரு தனியாரினுடையது. ரூ. 20 நுழைவுக் கட்டணம், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பலவேறு வகைகளில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

மெழுகு அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் உதகை ஏரி நோக்கி பயணித்தோம். மழை தூறிக் கொண்டிருக்கவே படகுச் சவாரி செய்ய முடியாது என்று ஏரியின் அழகை கண்டு ரசித்தோம். உதகை ஏரியில் மோட்டார் விசைப் படகு, துடுப்புப் படகு, கால் மிதிப் படகு என்று பல்வேறு வகைகளில் படகுச் சவாரி செய்யலாம். எரிக்கரையில் ஏராளமான கடைகள் மற்றும் அதற்க்கேற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள். அந்த இதமானக் குளிருக்கு இதமாக சூடான ஊட்டி மிளகாய் பஜ்ஜி வாங்கி சுவைத்தோம்.


மீண்டும் அவரவர் வண்டிகளில் உதகை நகரச் சாலைகளில் பயணித்து வண்டியை ஒப்படைத்துவிட்டு எங்களது அறையை நோக்கி நடக்கத் துவங்கினோம. மேலும், வீட்டுக்கு தேவையான தேயிலை மற்றும் யூக்கலிப்டஸ் தைலங்களையும் உதகை கூட்டுறவு அங்காடியில் வாங்கிக்கொண்டு அறையை சென்றடைந்தோம். இரவு உணவை முடித்து உறங்கலானோம் அடுத்தநாள் திட்டங்களை யோசித்துக்கொண்டே.

முதல் நாள் ஹோட்டல் மேலாளரிடமும், வெளியில் சில உள்ளூர் பயண ஏற்பாட்டாளர்களிடமும்  விசாரித்து உதகை உள்ளூர் இடங்கள், பைகாரா மற்றும் முதுமலை வனவிலங்கு சரணாலயம் செல்ல வண்டிக்கு முன் பதிவு செய்திருந்தோம். காலை சரியாக 9 மணிக்கு Hotel அறையை காலி செய்துவிட்டு முதல்நாள் ஏற்பாடு செய்திருந்து வண்டியில் பயணம் செய்ய தயாரானோம்.

மிக இதமான மழையுடன்தான் எங்களுடைய பயணத்தை துவக்கினோம். முதலில் சாக்லேட் அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். இதுவும் ஒரு தனியார் வசமான அருங்காட்சியகம் தான் (சாக்லேட் கடை). நுழைவுக் கட்டணம் ரூ. 20. நல்ல கலைப் பொருட்கள் சாக்லேட் மற்றும் வெள்ளை நிறத்திலான சாக்லேட் வகைகளில் செய்து வைத்திருந்தனர். முடிவில் சாக்லேட் துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நமக்குத் தேவையான சாக்லேட் வகைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். நல்ல ஒரு Marketing technique என்று தோன்றியது.

பைகாரா செல்லும் வழியில், Pine Forest எனப்படும் ஊசியிலைக் காடுகளை பார்த்து ரசித்தோம்.பெரிய பெரிய மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துள்ளது போல இருந்தது. புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். இந்த மரங்கள் வரிசையின் முடிவில் காமராஜர் சாகர் அணை உள்ளதாக வண்டி ஓட்டுனர் கூறினார். மேலும், பல திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்ட 9th Mile என்ற இடத்தில் சில மணித்துளிகள் செலவு செய்துவிட்டு பைகாரா நோக்கிப் புறப்பட்டோம்.


பைகாரா என்னும் இடத்தில் உருவாகும் பைகாரா ஆறு, அருவியாக விழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக  நீர் மின்சாரம் இங்கு எடுக்கப்படுகிறது. உதகை-கூடலூர் சாலையில் பைகாரா ஆற்றின் குறுக்கே பைகாரா அணை ஒன்றும்  கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சாலையிலிருந்தே பைகாரா அணை, மட்டும் அருவியைப்  பார்க்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பைகாரா ஆற்றின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக படகுச் சவாரி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அங்கேயும் படகுச் சவாரி செய்ய முடியாமல் ஆற்றின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம். பைகாரா ஆறு இந்தியாவின் வரைபடம் போல தோற்றமளிக்கின்றது.


பைகாராவில் இருந்து  கூடலூர் வழியாக முதுமலை சென்றடைந்தோம். முதுமலை வனவிலங்கு சரணாலயம் தமிழகத்தின் எல்லையிலிருந்து தொடங்கி கர்நாடக மற்றும் கேரளா எல்லை வரை விரிகின்றது. 1940-ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு காப்பகம் இதுவேயாகும். முதுமலை காடுகள் அவ்வளவு அடர்த்தியாக இருக்கவில்லை. மேலும் இந்தக் காட்டுப்பகுதியில் யானை, மான்கள், சிறுத்தைகள், கரடிகள் காட்டுப்பன்றிகள், முள்ளம்  பல வகையான உயிரினங்கள் இருப்பதாக கூறி இருந்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக Tempo Traveller வண்டியில் காட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ஒரு மணி நேரப் பயணத்திற்கு ரூ. 150 வசூலிக்கின்றனர். மேலும், முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு காட்சியகமும் அரசு அமைத்துள்ளது.



மேலும், திறந்த வெளி ஜீப்பில் காட்டினுள்ளே சென்று வன உயிரினங்களை பார்க்க முடியும். அதற்க்கான வசதியுடன் பல ஜீப்புகள் காத்திருக்கின்றன. 1.30 நிமிடப் பயணம். அரசு வண்டியில் சென்றால் செல்ல முடியாத சத்தியமங்கலம் வனப்பகுதியையும், மாயோர் என்னும் சிற்றுரையும் அங்கு ஓடும் அழகான நதியையும் காண முடிகின்றது. 10 பேர் அமரக் கூடிய ஜீப்பிற்கு ரூ. 800 கேட்கின்றனர். காட்டுவழிப் பயணம் என்பதால் அதன் சுவாரஸ்யத்தை கண்டு களிக்க இந்த தொகை கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாயோர் நதி யில் ஒரு சிறிய தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தை மிக அருகில் இருந்து கண்டு களிக்க முடிகின்றது. இந்த நதி பவானி ஆற்றுடன் கலப்பதாக கூறினார்கள். 1.30 மணி நேர ஜீப் பயணத்தில் நாங்கள் யானை, மான்கள், மயில்கள் மற்றும் லங்கூர் வகை குரங்குகளை  மட்டுமே பார்க்க முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வாசகம் பலித்திருந்தது. அந்த வாசகம், "அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே மிருகங்களை காண முடியும்", "Animal sight-seeing is the matter of luck".



முதுமலையில் தாவரங்கள், காடு மற்றும் விலங்குகளை கண்டு ரசித்த பிறகு மசினகுடி, தலைகுந்தா  வழியாக  26 கொண்டை ஊசி திருப்பங்கள் உடைய சாலையில் மீண்டும் உதகை வந்தடைந்தோம். ரம்மியமான சாலை அப்போதுதான் போட்டு முடிக்கப்பட்டிருந்தது. உதகையில் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 2 நாட்களுக்கான பயணத்தை மீண்டும் நினைத்துக்கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.  
Read More

Thursday, 5 December 2013

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள்

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள் என்னும் தலைப்பில் அதிஷா அவர்கள் அவரின் வலைப் பதிவினில் பகிர்ந்திருந்தார். அந்தப் பட்டியல் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. (நன்றி: அதிஷா, பா. ரா)

நூறு நூல்களின் பெயர் மட்டுமின்றி அதன் சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் தரவரிசைப் படி அமைக்கப்படவில்லை. சென்னை புத்தக காட்சி 2014 சமயத்தில் இந்த நூல்களின் பட்டியல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்,

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.
Read More

Wednesday, 4 December 2013

சென்னை புத்தக கண்காட்சி - 2014

சென்னை புத்தக கண்காட்சி - 2014

இடம்: 

YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035

நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014

இம்முறை பல போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக பபாசி இணையதளம் அறிவிக்கின்றது. போட்டிகளின் விபரங்கள்,

1. சிறுகதை போட்டி 
2. குறும்படப்  போட்டி
3. ஓவியப் போட்டி
4. பேச்சுப் போட்டி 

மேலும் விபரங்களுக்கு http://www.bapasi.com/
Read More

கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US  Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.  

துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான். அனைவருக்கும் அவரவர் விருப்ப செய்தித் தாள், காபி (அ) டீ. காலை நேர ரயில் என்பதால் காலை சிற்றுண்டி, மதிய உணவு அனைத்தும் ரயிலினுள்ளேயே. ரயில் ஒன்றும் அத்தனை வேகமில்லை. இடையில் தொழில்நுட்ப காரணங்களுகாக ஈரோடு சந்திப்பில் நிறுத்தப் படுகிறது. சரியான நேரத்தில் கோவை வந்தடைந்தோம்.

பயணத்தின் போதே, கோவையில் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியலிட்டு அதற்கான வண்டியையும் ஏற்பாடு செய்தாயிற்று. ஈஷா யோகா மையம் மற்றும் மருதமலை முருகனை தரிசித்துவிட்டு திருமண நிகழ்வுக்கு செல்வதாக திட்டம். 

கோவை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் நமக்கான வண்டியில் அமர்ந்து ஈஷா நோக்கி  பயணமானோம்.கோவை மாநகர எல்லை முடிந்து பேரூர் கோவிலை வெளியிலிருந்தே தரிசித்து விட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரம் நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும் பச்சை பசேலன தோட்டங்கள் மற்றும் அதன் நடுவினிலே வீடுகள் அன்று பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

ஈஷா தியான மையம்:

ஈஷா தியான மையம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தியான மையம் மட்டுமல்லாது தீர்த்தக்குண்டம், லிங்க பைரவி ஆலயத்தையும்   உள்ளே கொண்டுள்ள பிரம்மாண்டமான கட்டுமான அமைப்பு.

தீர்த்தக்குண்டம் என்னும் அமைப்பு  கற்களால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொட்டி (கற்களால் ஆன குளம்) போன்றுள்ளது. இந்த குளத்தின் நடுவினில் நீர்வீழ்ச்சி கொட்டிக்கொண்டிருகின்றது. மூன்று பாதரச லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியினில் நீரில் மூழ்கியபடி நிறுவப்பட்டுள்ளது. இந்த பாதரச லிங்கங்களை குளத்தில் இறங்கி கையால் தொட்டு வணங்க முடியும். இந்த குளத்தில் இறங்கி தரிசிக்க வேண்டுமெனில் அதற்கென்று அமைக்கப்பட்ட இடத்தினில் குளித்துவிட்டு வெறும் காவி துண்டுடன் தான் தரிசிக்க முடியும்.

இந்த தீர்தக்குண்ட அமைப்பின் தரிசனம் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தியது மட்டுமல்லாது ஒரு ஆன்மீக அனுபவத்தை அளித்தது. தியான லிங்க மண்டபத்தினுள் ஒரு நபர் நுழையத் தேவையான ஆன்மீக மனதை இந்த தரிசனம் கொடுக்கின்றது. இந்த தீர்த்தக்குண்டமானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தக்குண்டத்தில் தரிசனம் முடிந்தபின் தியான மையத்தினுள் செல்லும் முன்பாக லிங்க பைரவி ஆலய தரிசனம்.  லிங்க பைரவி ஆலயத்தின் முன்னே முப்பெரும் தேவர்களின் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன தத்ரூபமாக.

இவையனைத்தையும் தரிசித்துவிட்டு ஈஷா தியான லிங்க மண்டபத்தினிற்குள் அனுமதிக்கப்படுகின்றோம். அரை வட்ட வடிவில் ஒரு DOM  அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட தியான லிங்கத்தை சுற்றி பலரும் தியானம் செய்தபடி அமர்ந்திருக்கின்றனர். எந்தவிதமான சப்தம் எழுப்பும் பொருட்களுக்கும் தியான லிங்க மையத்திற்குள் அனுமதி இல்லை. பேன்ட் அணிந்து சென்றால் கூட இரண்டு அங்குலத்திற்கு மடித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

15 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிய ஒலி  எழுப்பப்படுகின்றது. அதனை வைத்து தியானத்தில் இருந்து வெளிவரலாம். மொத்தத்தில் ஈஷா  தியான மைய தரிசனம் ஒரு Rejuvenating experience.

மருதமலை:

அறுபடை வீடுகள் கொண்ட குமரனின் 'ஏழாவது படைவீடு' எனச் சிறப்பாகப் போற்றப்படும் ஆலயம்தான் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயில் கொங்கு நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 அடி உயரத்திலும், கோவை மாநகரில் இருந்து வடமேற்குத் திசையில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலும் அமையப் பெற்றுள்ளது. கோவை மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு 70 ஆம் எண் பேருந்து வசதி உண்டு.


மூன்று பக்கமும் மலை அரண் சூழப்பெற்ற மருதமலை எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் 'மருதமலை' என அழைக்கப்படுகிறது. மருதமலையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி அளிக்கின்றார்.கடந்த மார்ச் மாதத்தில் தான் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. கோவில் மிக அழகாக  பராமரிப்பு செய்யப்படுகின்றது.

திருக்கோவிலின் ராஜ கோபுரத்தின் வழியாக உள்ள படிக்கட்டிலும், திருக்கோவிலின் தெற்கு புறத்தில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் மூலஸ்தானத்தை அடையலாம். முருகனை தரிசித்துவிட்டு தெற்குப் புற வழியாக கீழ் இறங்கினால் சப்தகன்னியர் சந்நிதி உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் "பாம்பாட்டி சித்தர் சந்நிதி" அமைந்துள்ளது.


மலைக் கோவிலை படிக்கட்டுகள் வழியாகவும், வாகன வசதிகளினூடாகவும் அடையலாம். திருத்தணி கோவில் போலவே, இங்கும் தேவஸ்தான அமைப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் ஏராளம். இங்கு ஒரு கடையில் (கடை முழுவதும்) இலந்தை பழத்தால் ஆன தின்பண்ட வகையறாக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மலையில் கிடைக்கும் இலந்தைப் பழங்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதாகக் கூறினார்கள். பல நாட்களுக்குப் பிறகு இலந்தைப் பழ தின்பண்டங்கள் சுவைத்தோம். மருதமலை முருகன் தரிசனத்தை திவ்யமாக முடித்துவிட்டு மீண்டும் கோவை நோக்கிப் பயணமானோம்.

நண்பரின் திருமண வரவேற்பு, கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி'ஸ் கிளப் - ல். செல்லும் வழியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் Brookfields Mall, Fun Mall ஆகியவைகளையும் பார்த்தோம்.

நண்பரின் திருமண வரவேற்பு முடிந்து  மீண்டும் கோவை காந்திபுரம் ஹோட்டல் அறைக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் பயணத்திற்கு தயாரானோம்.  
Read More

Monday, 2 December 2013

படித்ததில் பிடித்தது


இன்று  வலைப்பூவில் படித்ததில் பிடித்தது.

அ முதல் ஔ வரை!

அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ – அவ்வ்வ்வ்!

- தமிழன் என்ற இந்தியன்
Read More

Thursday, 26 September 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும்.



இடம்:

டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
  • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
  • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
  • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
  • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.



நிகழ்ச்சி நிரல்

நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
  • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
    • தமிழ்த் தட்டச்சு
    • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
    • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
    • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
  • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
    • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
    • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
    • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
    • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?
மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
  • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
  • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
  • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
  • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
  • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
  • நன்றியுரை (3 நிமிடங்கள்)
Read More

Friday, 20 September 2013

நாய் பாசம்


தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.

4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம்,

"ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை கடித்துவிடும்!!!" 

என்று உரையாடுகின்றார். இதை நாய் பாசம் என்பதெல்லாமல் வேறேன்பது?
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena